தமிழகம்

நினைவுச் சின்னமாக மாறிவரும் மக்களின் வரிப்பணம் ! 10 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்றத்  தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோடங்கி பாளையம் கிராமம். இப்பகுதியில் அதிகளவு கல்குவாரிகள் அமைந்துள்ளது. சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருவதால், இப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும் கோவை திருப்பூர் மாவட்டங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கோடங்கி பாளையம் கிராமத்தில் காரணம் பேட்டை பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன.

மேலும் கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்தும், சோமனூரில் இருந்தும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும்படியாக அமைக்கப்பட்டிருந்தன. கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்ல ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பேருந்து நிலையம் இயக்கப்பட்டு சில தினங்களில் ஓரிரு பேருந்துகள் வந்து சென்ற நிலையில், படிப்படியாக பேருந்து நிலையம் இங்கு அமைக்கப்பட்டு இருப்பது மறந்து போனது.

கொரானா காலகட்டத்தில் இங்கே காய்கறி சந்தை அமைக்கப்பட்டு சில மாதங்கள் இயக்கி வந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கே அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன. மேற்கூறைகள் அதிகளவு சேதம் அடைந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இங்கு அமைக்கப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இதுசம்பந்தமாக நமது இதழில் அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் பலமுறை செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் மேற்படி காரணம்பேட்டை பேருந்து நிலையம் திறந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் 11-வது ஆண்டு துவங்கவுள்ள நிலையில், மேற்படி பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆ. அண்ணாதுரை துவக்க விழா கல்வெட்டுக்கு மலர் கொத்து கொடுத்து நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்.. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் ரூபாய் ஒரு கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையம், கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், இங்கு செலவு செய்யப்பட்டுள்ள மக்களின் வரிப்பணம் அனைத்தும் வீணாகி வருவதாகவும், உடனடியாக அரசு தலையிட்டு இந்த பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் இதுபோன்று கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை, எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வீணாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

திறப்பு விழா கண்டு கடந்த பத்தாண்டுகளாக மூடு விழாவை வெற்றிகரமாக கடந்து வந்த இந்த பேருந்து நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button