“சம்ஹாரம்” படத்தின் திரை விமர்சனம்

வித்யா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின் பத்மநாபன், ஷருமிதா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சம்ஹாரம்”.
கதைப்படி.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஷருமிதா இரவு நேரத்தில் வீட்டைவிட்டு தப்பித்து, தான் விரும்பும் காதலனை சந்திக்க செல்கிறார். அப்போது தனது அண்ணன் பிரஜின் அவளை பிடித்து அறையில் அடைத்து வைக்கிறார். சொந்தம் விட்டுப் போக கூடாது என்பதற்காக தனது மாமா மகன் கணேஷூக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் பிரஜின். பின்னர் ஷருமிதா தனது காதலனுக்கு நிலமையை எடுத்துக்கூறி காப்பாற்ற வீட்டிற்கு வர வைக்கிறார்.

கணேஷ் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வருகிறான். அவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் எனது அண்ணன் என வருந்துகிறார். பின்னர் இருவரும் கணேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். இதற்கிடையில் பிரஜின் நண்பர் மூலம் இரவு மட்டும் தங்கிக்கொள்வதற்காக இருவர் வருகின்றனர். மேலும் முகமூடி அணிந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து தங்குகிறார்.
கணேஷை தீர்த்துக்கட்டிவிட்டு ஷருமிதாவை திருமணம் செய்ய நினைக்கும் காதலனின் எண்ணம் நிறைவேறியதா ? வீட்டிற்கு வந்த இருவர் யார் ? முகமூடி அணிந்த நபர் எதற்காக வருகிறார் என்பது மீதிக்கதை..

ஒரே இரவில் வீட்டில் நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்த திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பொறுப்பான அண்ணனாகவும், அன்பான கணவனாகவும் நடித்திருக்கிறார் பிரஜின். காதலனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தாலும் அவளின் தவிப்பு, அண்ணன் மீதுள்ள பாசம் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷருமிதா. அதேபோல் கணேஷ் சாவரட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்.




