இந்தியா

மசூதியில் நடைபெற்ற ஹிந்து திருமணம்..!

கேரளாவில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் திருமணம் முழுக்க முழுக்க ஹிந்து மத முறைப்படி, மசூதியில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் என, பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளது.
இருப்பினும், கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர், ஹிந்து -முஸ்லிம் சமூகத்தினர் இடையே நீருபூத்த நெருப்பாய் எப்போதுமொரு பகைமை உணர்வு இருக்கத்தான் செய்கிறது.இதற்கு அவ்வப்போது அரசியல் தூபமும் போடப்படுகிறது.

ஆயினும் ஹிந்து, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சாமானிய மக்கள், எப்போதும் சகோதர உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இரு மதத்தினருக்கும் இடையேயான சகோதர உணர்வை பறைசாற்றும் விதமாக தரமான ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ஆலப்புழா மாவட்டத்துக்குட்ட காயம்குளம் என்ற ஊரில் உள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஓர் இளம்ஜோடிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தனது மகளுக்கு பெரிய கல்யாண மண்டபம் பார்த்து, அதில் தடபுடலாக திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு பொருளாதார வசதியில்லாததால், மணமகளின் தாயார் செய்வதறியாது திகைத்து வந்தார்.

இதனை அறிந்த அந்தப் பகுதி முஸ்லிம் சமூகத்தினர், “நீங்கள் விரும்பினால், சேருவள்ளி முஸ்லிம் ஜமாத் மசூதியில் வைத்து உங்கள் மகளின் திருமணத்தை நடத்தலாம்“ என்று மணமகளின் தாயிடம் தெரிவித்துள்ளனர். அவரும் தனது மகளின் திருமணத்தை மசூதியில் நடத்த சம்மதித்தார்.

இதையடுத்து, அந்த மசூதி கமிட்டியின் ஒப்புதலோடு, இளம் ஜோடியின் திருமணம் முழுக்க முழுக்க ஹிந்து மத முறைப்படி மசூதியில் நடைபெற்றது. முஸ்லிம் சமூக மக்கள் புடைசூழ நடைபெற்றுள்ள நெகிழ்ச்சியான இந்தத் திருமண வைபவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தினால், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரின் மனதில் இனம்புரியாத ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், மசூதியில் ஹிந்து முறைப்படி ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • சாகுல்ஹமீது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button