மாவட்டம்

வயதான தம்பதியர் கொலை வழக்கில், நாடகமாடிய உறவினர் ! விபத்தில் சிக்கியவரை கைதுசெய்த போலீஸ் !

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வயதான தம்பதியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்துள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார் விவசாயி பழனிச்சாமி (95). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக பர்வதம் (75) என்பவரை திருமணம் செய்துகொண்டு இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் பழனிச்சாமியின் மகன் மற்றும் இரு மகள்களும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.

இதனால் வயதான முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி மற்றும் பர்வதம் தம்பதியர் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட உறவினர்கள் அவிநாசி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றினர். சம்பவ இடத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் மாவட்ட எஸ்.பி. கிரீஷ் யாதவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், படுகொலை செய்யப்பட்ட பழனிச்சாமியின் வீட்டிற்கு பக்கத்து தோட்டத்தில் அவரது உறவினரான சின்னப் பெரியசாமி (80), தனது மனைவி பாப்பாத்தியம்மாள் (75), மகன் ரமேஷ் (43) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பழனிச்சாமி குடும்பத்திற்கும் சின்ன பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே ஆடு மற்றும் கோழிகள் வேலி தாண்டி வருவது குறித்து பல மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், ரமேஷ் அடிக்கடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்றும் தகராறில் ஈடுபட்ட இதையடுத்து ரமேஷ் ஆத்திரம் அடைந்து இரவு அதிக மது போதையில் வீடு புகுந்து பர்வதத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார், அடுத்து பழனிச்சாமியையும் கழுத்து மற்றும் காது அருகே வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர். இரவில் வெட்டிக் கொன்ற ரமேஷ், தனது வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் காலையில் பழனிச்சாமி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வேறு யாரும் அங்கு வராததால் திரும்ப தனது வீட்டிற்கு வந்து தனது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் பழனிச்சாமி மற்றும் பர்வதம் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் சொல்லி நாடகமாடி விட்டு, தனது மொபட்டில் மதுபோதையில் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற ரமேஷ் அவிநாசி அருகே வாகன விபத்தில் அடிபட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவலை அடுத்து, விரைந்து சென்ற போலீசார் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், கொலை செய்து விட்டு அந்த சமயத்தில் போட்டிருந்த ஆடைகளை கழட்டி பக்கத்து தோட்டத்தில் பக்கெட்டில் தண்ணீரில் ஊரவைத்து விட்டு, வேறு ஆடை அணிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, படுகொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா ? கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா ? என்பது குறித்தும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைரேகை மற்றும் தடையவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். முன் விரோதம் காரணமாக வயதான தம்பதிகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு உறவினரே நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button