Uncategorized

8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது

சேலம் 8 வழிச் சாலை அமைப்பது குறித்து நெடுஞ்சாலை துறை தற்பொழுது கலந்தாய்வு செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளது. இத்திட்டத்தை எதிர்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக, தற்போது அந்த திட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக நானே போராடி 8 நாட்கள் சேலம் மத்திய சிறைக்கு சென்று இருந்தேன்.
மற்றும் பல கட்சியினர், இயக்கத்தினர், பொதுமக்கள் என பலரும் இத்திட்டத்தை எதிர்த்து போராடினார்கள், அப்பொழுது திமுகவும் இதனை எதிர்த்து போராடியது குறிப்பிடத்தக்கது. 2018ல் மத்திய அரசு சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்த போதே விளை நிலங்களும் கிராமங்களும் பாதிக்கப் படுமென விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்பொழுது சென்னை – சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருவது கவலையழிக்கின்றன. பெரு நிறுவன முதலாளிகளின் நலனுக்காகவே தமிழ்நாட்டு உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கும் இந்த தேவையற்ற விவசாயிகள் விரோத மற்றும் விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுவது உழவர்களின் நலனுக்கு எதிரானதாகும்.

சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை யில் இருந்து சேலத்திற்கு 276.5 கி.மீ நீளத்திற்கு எட்டு வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசு, இதில் கொள்ளையடிப்பதற்காகவே அப்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியது. அதற்காக சுமார் 7 ஆயிரம் உழவர்களிடமிருந்து சுமார் 6978 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

உழவர்களை பாதிக்கும் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை ஆம் ஆத்மியும் நடத்தியது,

இந்தத் திட்டத்தை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து கடந்த 2019-இல் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 8 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட அத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி நிலங்கள் நில உரிமையாளர்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஓராண்டு காலம் பொறுமையாக இருந்த மத்திய அரசு, இப்போது சென்னை & சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன் முதல் கட்டமாக பிகார் மாநிலம் தன்பாத் ஐ.ஐடி வல்லுனர் குழுவைக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.
அடுத்தக்கட்டமாக சமூக, பொருளாதார தாக்கம் குறித்து அறிக்கை தயாரித்து அளிக்க கேரள அரசின் கிட்கோ நிறுவனத்தை மத்திய அரசு அமர்த்தியுள்ளது.

அந்த நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி தரும்படி தமிழக அரசிடம் அந்நிறுவனம் கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலை தமிழ்நாட்டுக்கு தேவையில்லை;
அது விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்பது தான் ஆம்ஆத்மிகட்சியின் நிலைப்பாடு ஆகும்.

சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நான்காவதாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ பணிகளும் நிறைவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஐந்தாவதாக இந்த சாலை தேவையற்றது.

சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கிட்டத்திட்ட 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை பாதிக்கும் கார்பொரேட் முதலாளிகளும் கமிஷன் பேர்வழிகளும் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படுவது தவறானதாகும்.

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட, அதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தமிழக அரசு தான் ஒன்றிய அரசுக்கு செய்து கொடுக்க வேண்டிய நிலை வரும், இந்நிலையில் இதை தமிழக கடுமையாக ஒன்றிய அரசை எதிர்க்க வேண்டும்.

8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு இப்போது விவசாயிகளின் பக்கம் நிற்கப் வேண்டும் …. மத்திய அரசின் சூழ்ச்சிக்கு துணை போகக்கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு .

தமிழ்நாட்டு உழவர்களின் நலன்களுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது மீண்டும் மீண்டும் தினிப்பதை தமிழக அரசு தடுத்திட வேண்டும் . என்று தமிழக அரசை தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button