அரசியல்

நீதிபதிகளை விமர்சித்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்: நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு

தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கிவைத்தார். பின்னர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள் தங்கள் நிலையை மாற்றி, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று கூறுகிறார்கள். நீதிபதிகளுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது, அந்த வரம்புக்குள் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். ஆக்கிரமிப்பு இருந்தால், அதைக் காலி செய்வதற்கு உத்தரவிடலாம். காலி செய்யாவிட்டால், காவல்துறை பாதுகாப்புடன் காலி செய்யலாம். வாக்குரிமையே கிடையாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

எதை எடுத்தாலும் நீதிமன்றத்தின் தலையீடு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. கொலீஜியம் முறையில் தங்களின் சீனியர்களைப் பிடித்து பதவிக்கு வருகிறார்கள். எதை எடுத்தாலும் அரசியல்வாதிகள்மீது குற்றம் சாட்டவும், காலையில் ஒரு தீர்ப்பு, மாலையில் ஒரு தீர்ப்பு என்ற நிலை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு, பொதுமக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தை விமர்சித்த தளவாய் சுந்தரத்தின் இந்தப் பேச்சு,  சர்ச்சையாகக் கிளம்பியது. இந்நிலையில் தளவாய் சுந்தரம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீட்டார். அப்போது தளவாய் சுந்தரம் மீதான குற்றசாட்டுக்கான புகார் மற்றும் ஆவணங்களை சமர்பித்து பதிவாளரிடம் புகார் அளித்தால் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என உத்தரவிட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button