திருப்பூரில் மது விற்பனையை… தனியாருக்கு தாரை வார்த்த டாஸ்மாக் நிர்வாகம் !

தமிழகத்தில் இயங்கும் மதுபான கடைகள் அனைத்தும், அரசின் கட்டுப்பாட்டில் டாஸ்மாக் என்கிற பெயரில் இயங்கி வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் தனியார் மதுபான கடைகள் போன்று செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகளின் முகப்பில் கடை எண், வேலை நேரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பெயர் பலகை எதுவும் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. மேலும் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பெயர்பெற்ற ஊர் என்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தொழில் சார்ந்து வந்து செல்கின்றனர்.
இங்கு செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 12 மணி முதல் இரவு 10 வரை செயல்பட்டாலும், 24 மணி நேரமும் பார்களில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் இயங்கிவரும் பார்களில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், பெரும்பாலும் வெளிமாநில மது பாட்டில்களை கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட மது விலக்கு காவல்துறையினர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மது பிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.