பல்லடம் அருகே கண்ணை மறைத்த கள்ளக்காதலுக்கு பலியான குழந்தை..!
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-05-at-12.27.57-AM_com-780x470.jpg)
திண்டுக்கல் மாவட்டம்- நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(28). இவருடைய மனைவி சுபா(26). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சிவகங்கை மாவட்டம்- மானாமதுரையைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுடைய மகன் பழனிவேல்ராஜன்(4). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-05-at-12.27.57-AM-1_com-771x1024.jpg)
இந்த நிலையில் பார்த்தசாரதிக்கும், திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் (சமூக வலைதளம்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 4 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த திவ்யா பார்த்தசாரதியுடன் சேர்ந்து தான் அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து ஒவ்வொரு சுற்றுலா தளமாக சுற்றியுள்ளனர். கையில் இருந்த பணம் முழுமையாக காலியான நிலையில் இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன்- மனைவி எனக்கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். பார்த்தசாரதி, திவ்யா இருவருக்கும் உல்லாசம் அனுபவிக்க குழந்தை இடையூறாக இருந்ததால் பார்த்தசாரதி திவ்யாவின் 4 வயது குழந்தை பழனிவேல்ராஜனை அடிக்கடி அடித்து துன்புறுத்திள்ளார்.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-05-at-12.27.56-AM_com-1000x1024.jpg)
இதே போல கடந்த சில தினங்களுக்கு முன் பார்த்தசாரதி திவ்யாவுடன் உல்லாசமாக இருந்தபோது நான்கு வயது குழந்தை பழனிவேல் ராஜன் வாந்தி எடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி, குழந்தையை தாக்கியுள்ளார். குழந்தையை அடிக்காதீர்கள் என தடுத்த திவ்யாவையும், சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். பார்த்தசாரதி தாக்கியதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திவ்யாவிற்கும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர் 4 வயது குழந்தை வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தை பழனிவேல்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் பார்த்தசாரதி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்ததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார். திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இண்ஸ்டாகிராமில் வளர்ந்த கள்ளக்காதலால் உல்லாசத்திற்கு தடையாக இருந்த குழந்தையை அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.