ஒரே வீட்டில் வசிக்கும் ஜோடிகளுக்குள் இருப்பது நட்பா ? காதலா ?.! “கப்புள் ஃப்ரண்ட்லி” படத்தின் விமர்சனம்

UV கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், அஜய் குமார் ராஜூ தயாரிப்பில், சந்தோஷ் ஷோபன், மானசா வாரனாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கப்புள் ஃப்ரண்ட்லி.
கதைப்படி.. திருச்சியில் குடும்பத்தினருடன் வசித்துவரும் சிவா ( சந்தோஷ் ஷோபன் ), இன்டீரியர் டெக்கரேட்டர் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் சுற்றி வருவதால், தனது காதலி அவரைவிட்டு பிரிந்து செல்கின்றார். பின்னர் விரக்தியடைந்த சிவா சென்னை செல்கிறார். பல இடங்களில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டே வருமானத்திற்கு பைக் டாக்ஸி ஓட்டுகிறார். இதேபோல் மதுரையைச் சேர்ந்த மித்ரா ( மானசா வாரனாசி ) ஜ டி துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என சென்னையில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரது பெற்றோர் ஊருக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சிவாவின் அறிமுகம் கிடைத்ததால், பேருந்து நிலையத்திற்கு சிவாவின் பைக்கில் செல்கிறார். ஏதோ மனமாற்றம் அடைந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்புகிறார். ஆனால் விடுதியில் இடம் காலியாக இல்லை என்கின்றனர். பின்னர் அன்றைய நாள் முழுவதும் இடம் தேடி அலைகின்றனர். இறுதியில் சிவா தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி, வாடகையை பகிர்ந்து கொள்கிறார் மித்ரா.
பின்னர் இருவரும் வேலை அழைக்கின்றனர். சிவாவிற்கு திறமை இருந்தாலும், பேச்சுத்திறன் குறைவு என்பதால் மித்ரா தனது திறமையை வெளிப்படுத்தி சிவாவிற்கு வேலையை உறுதிப்படுத்துகிறார். இதற்கிடையில் இருவரும் பரஸ்பர காதல் உருவாகிறது. சிவா பொருளாதாரத்தில் உயரத்திற்கு செல்கிறார். மித்ரா வேலை தேடாமல் தன்னுடனே இருக்குமாறு வற்புறுத்துகிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் பிரிந்து செல்கின்றார் மித்ரா…
பின்னர் இருவரும் இணைந்தார்களா ? அவர்களது வாழ்க்கை என்னானது என்பது மீதிக்கதை…

படத்தில் குடும்ப உறவு, வறுமை, தேடல், காதல் என ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் எதார்த்தமான சம்பவங்களை அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும் இன்றைய சூழலில், குழந்தை இல்லாத தம்பதிகள் ஃபெர்ட்டிலிட்டி சென்டர்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளால் படும் வேதனைகள், மனைவியின் உடல், மனம் படும் கஷ்டங்களில் கணவன் உறுதுணையாக இருப்பது போன்ற காட்சிகள் பிரமாதம்.
படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.




