இராமநாதபுரத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை முகாம் !

இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முகாமை இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளுக்கு எதிராக திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தையும், தமிழ் மொழியையும் வஞ்சித்து வரும் பாசிச பா.ஜ.க அரசிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை சந்தித்து, முதலமைச்சரின் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் எடுத்துக் கூறி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், தொகுதிக்கு 90 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் நான்கு தொகுதிகளுக்கு சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் களப்பணியாற்றி அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமிற்கான துவக்க நிகழ்ச்சி இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமையில், இராமநாதபுரம் நகர் வடக்கு, தெற்கு, மண்டபம் மேற்கு ஒன்றியம், மண்டபம் மத்திய ஒன்றியம், மண்டபம் கிழக்கு ஒன்றியம், மண்டபம் பேரூர், மண்டபம் கிழக்கு ஒன்றியம், இராமேஸ்வரம் நடராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வண்ணமான கருப்பு, சிவப்பு வண்ணத்தில் சட்டையணிந்து இராமநாதபுரம் தெற்கு நகரில் 10-வது வார்டிலும், வடக்கு நகரில் 13-வது வார்டிலும் வீடு, வீடாகச் சென்று ஒவ்வொருவர் வீட்டிலும் தரையில் அமர்ந்து, மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதிகளை எடுத்துக்கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விளக்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தினார்.

இந்த நிகழ்வுகளுக்கு இராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர், நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், இராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் டி.ஆர். பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் வீ.முத்துக்குமார், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான், இராமேஸ்வரம் நகர் செயலாளர், இராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் கே.இ. நாசர்கான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேற்கண்ட இடங்களின் தி.மு.க வார்டு செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.