OTTயில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை அரசால் தடுக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/06/IMG-20200529-WA0013_copy_875x583.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அம்மா உணவுகத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொது மக்களுக்கு மூன்று வேளையும் 2 முட்டைகள் இலவச உணவுடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் முழுபாதுகாப்பு உடன் செல்வதை ஆய்வு செய்தார். பின்னர் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அணைகளில் இருந்து நீர் திறக்கவும் முதல்வர் உத்தரவுபிறப்பித்துள்ளார். திருட்டு விசிடியை ஒழிக்க முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன் பயனாக திருட்டு விசிடி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருட்டு விசிடி சட்டம் தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே திருட்டு விசிடி, ஆன்லைனில் திருட்டுத்தனமாக திரைப்படம் வெளியாகமல் இருக்க நடவடிக்கை எடுக்க முடியும்,.
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. OTT பிரச்சினை என்பது திரைப்படதுறையினருக்கு மட்டுமல்ல உலகளாவிய பிரச்சினை. OTTயில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அரசு இதனை தடுக்க முடியும் என்றால் எப்போதோ தடுத்து இருப்போம். அரசு நேரிடையாக தடுக்க முடியாது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பிரபல திரை நச்சத்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பேசி இது குறித்து முடிவு எடுக்க அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும். தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும். எனவே சட்டத்தினை தமிழக முதல்வர் மறுபரீசிலனை செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, காலம் தாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன அன்றே தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) இணையதளத்திலும் சட்டவிரோதமாக பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியிருப்பது சினிமா உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஓடிடி வெளியீட்டுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எழுந்த பிரச்னைக்கு மத்தியில் அந்த படம் அமேசான் பிரைமில் ரிலீஸ் செய்யப்பட்டது. அவ்வாறு ரிலீஸ் ஆன சில நிமிடங்களில் அதே ஹெச்.டி தரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் சட்டவிரோதமாக வெளியானது.
திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும். இந்நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது.
- நமது நிருபர்