சாலை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி மறுப்பு ! அதிகரிக்கும் விபத்துகள் ! 5 வயது சிறுமி உயிரிழப்பு !

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள சின்னாறு சாலை, உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையின் ஒரு பகுதியாகும். இந்தச் சாலை, உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக மூணாறு வரை செல்கிறது. மேலும் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் முக்கிய பங்கும் வகிக்கும் இந்த சாலையில், சுற்றுலா தலங்களான சின்னாறு, காந்தளூர், ரவிகுளம் தேசிய பூங்கா, மறையூர் மற்றும் துாவானம் அருவி ஆகியவை அமைந்துள்ளன. மேலும், இந்த சாலை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களுக்கு இடையே செல்கிறது. இந்தச் சாலை, அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்வதால், யானைகள், புள்ளிமான்கள், புலிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.

இந்த சாலையானது உடுமலையில் இருந்து, 28 கி.மீ., தொலைவில் தமிழக எல்லையான சின்னாறு அமைந்துள்ளது. அப்பகுதி வரை, இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்தும், தமிழக பகுதியில் உடுமலையிலிருந்து அமராவதி செல்லும் வழியில் உள்ள 9/6 சோதனை சாவடி முதல் சின்னாறு தமிழக மாநில எல்லை வரை ரோடு விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. மேலும், சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. சின்னாறு செல்லும் வழியில் இரண்டு கொண்டை ஊசி வளைவில் வாகனங்கள் மேலே செல்ல முடியாமல் திணறியபடியே செல்கின்றன. இந்த வளைவு பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, இரு மாநில போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் சின்னாறு கொட்டைஊசி வளைவில் நடந்த விபத்தில் 5 வயது குழந்தை உயிரிழந்தது. உடுமலை, மறையூர் சாலையில் எஸ்.பெண்ட் அருகே சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பயணம் செய்த ஷாலினி (5 வயது) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். ஷாலினி மறையூர் நிகில்ஷா என்பவரின் மகள் ஆவார். மறையூரில் இருந்து உடுமலை அருகே உள்ள அமராவதி அணைப்பகுதிக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். உடுமலையில் இருந்து சின்னார் வரையில் சாலை அதிகமாக சேதம் அடைந்ததுள்ளது. சாலையை சீரமைக்க பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முயற்சித்தும் வனத்துறை ஒப்புதல் அளிக்காததால் தொடர்ந்து சாலையை அகலப்படுத்தும் பணிகளை செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறுகிய சாலை, குண்டும் குழியுமாக இருக்கும் ஆபத்தான மலைப்பகுதி பாதையால் இதுபோன்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக செயல்படும் காரணத்தாலும், சாலையை புதுப்பிக்காத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா தளமாக இருக்கும் இந்த சாலையை விரைந்து சரிசெய்ய பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் இன்று வரை அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இருந்து வருவது வாகன ஓட்டிகள் சுற்றுலா வரும் பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சாலையை சீரமைக்க தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் ? வனத்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை சரிசெய்ய நடவடிக்கை பாயுமா ? என்கிற எதிர்பார்ப்பும் அப்பகுதியினர் மத்தியில் அதிகரித்துள்ளது.




