அன்னபூர்ணா ஓட்டல் இடிப்பு : கேஜி மருத்துவமனை சேர்மன் மீது வழக்கு..!
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/08/annapoorna.jpg)
கோவை கேஜி மருத்துவமனை அருகில் உள்ள ஓட்டல் அன்னபூர்ணா கட்டிடத்தின் சமயல் அறை கட்டிடத்தை இடித்து அகற்றிய சம்பவம் தொடர்பாக கேஜி மருத்துவமனையின் சேர்மன் பக்தவச்சலம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை அன்னபூர்ணா உணவகத்தின் ஒரு கிளை நீதிமன்றம் எதிரில் உள்ள கே.ஜி. மருத்துவமனைக்குச் சொந்தமான இடத்தில் 45 ஆண்டுகளாக வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை விரிவாக்கத்துக்காக 3 ஆண்டுகளுக்கு முன் உணவகத்தை அங்கிருந்து காலி செய்யுமாறு கே.ஜி. மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. காலி செய்ய மறுத்த அன்னபூர்ணா உணவக நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு பின்னர் சமாதானம் ஆனதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கிய நிலையில், இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஓட்டல் மூடப்பட்ட பின்னர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அன்னபூர்ணா உணவகத்தின் சமையல் அறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உணவக ஊழியர்கள் 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டிட இடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
![](http://naarkaaliseithi.com/wp-content/uploads/2019/08/news_9077_1.jpg)
அன்னபூர்ணா உணவகக் குழுமம் சார்பில் கே.ஜி.மருத்துவமனை நிர்வாகம் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அன்னபூர்ணா உணவகக் குழும தலைவர் ராமசாமி, கட்டிடத்தை இடிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை தாம் உணவக அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னைக் கொல்லும் சதித் திட்டத்தோடே கட்டிடத்தை இடித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
அன்னபூர்ணா குழும தலைவரின் இந்தப் புகார் தொடர்பாக கே.ஜி. மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அவர்கள் விளக்கமளிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அன்னபூர்ணா உணவகம் முன்பும் கே.ஜி. மருத்துவமனை வளாகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள இந்த இரு பிரபல நிறுவனங்களுக்கும் இருந்து வந்த பனிபோர் கட்டிட இடிப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
–சாகுல் ஹமீது