சினிமா

தகாத உறவிற்கு அழைத்த பிரபல நடிகர் ! புகார் கூறிய நடிகை ! தமிழ் திரையுலகில் சிக்கப்போகும் பிரபலங்கள் !.?

திரையுலகில் பாலியல் சீண்டல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், சமீபத்தில் அதிகரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் ரியாஸ் கான், உமா ரியாஸ் தம்பதியினரின் மகன் திருமணம் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ரியாஸ் கான் தனது குடும்பத்தினருடன் தனது கடமையை முடித்துவிட்டதாக கூறி சந்தோஷமாக இருந்து வருகிறார்.

கேரள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகைகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கேரள அரசு விசாரணைக் குழு அமைத்தது. அந்த விசாரணை குழு பல பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு, கடந்த 2019 ஆண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் நான்கு வருடங்களுக்கும் மேலாக அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதையடுத்து தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு அந்த அறிக்கை வெளியானது.

அதில் மலையாள சினிமாவில் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப் படுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடங்களை நடிகைகள் சந்திப்பதாக அந்த அறிக்கையில் கூறிப்பிடபட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு பல நடிகைகள் தங்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக, தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரேவதி சம்பத், கேரள நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதில் தான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த போது, தன்னை அனுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, அப்போது அவர் தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாக கூறியிருந்தார்.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் ( அம்மா ) பொதுச் செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது, மேற்கு வங்க நடிகை ஶ்ரீ லேகா தெரிவித்த பாலியல் புகார் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இயக்குநர் ரஞ்சித் தனது கழுத்தருகே தோல்களைத் தொட்டு பேசியதாகவும், அவரிடமிருந்து இப்படிப்பட்ட நடத்தையை நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுசம்பந்தமாக விளக்கம் அளித்துள்ள இயக்குநர் ரஞ்சித், இருவரும் ஒன்றாக சிகரெட் புகைத்தோம் அவ்வளவுதான் என்று தெரிவித்திருந்தார். மேலும் தன்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால், கேரள அரசின் சினிமா அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சினிமா விசாரணை குழுவின் அறிக்கை கேரள திரையுலகின் இரு ஜாம்பவான்களை ராஜினாமா செய்ய வைத்துள்ள நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் தொடங்கியுள்ளது. கேரள நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், தமிழ் நடிகர் ரியாஸ் கான் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒரு புகைப்பட கலைஞர் எனது அனுமதி இல்லாமல், ரியாஸ் கானிடம் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். பின்னர் ஒருநாள் இரவில் ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர் வெளிப்படையாக, கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தகாத உறவிற்கு அழைத்ததாகவும், அதற்கு விருப்பமாக இருக்கும் தனது தோழிகள் இருந்தால் அவர்களின் கைபேசி எண்களைக் கொடுக்கும் படியும் கேட்டார் என்று தெரிவித்திருக்கிறார். நடிகர் ரியாஸ் கான் மீது நடிகை ரேவதி சம்பத்தின் இந்த குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரியாஸ் கான் மகன் திருமணம் ஓரிரு நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், ரியாஸ் கான் மீதான நடிகையின் குற்றச்சாட்டு அவரது குடும்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவை ஆட்டிப்படைத்த விசாரணை குழுவின் அறிக்கை, தற்போது கோலிவுட்டிலும் தலையெடுத்துள்ளது. இந்நிலையில் தன்மீது குற்றம்சாட்டியிருக்கும் பெண் யாரென்றே தனக்கு தெரியாது என்றும், டீவியை பார்த்தே இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டதாக ரியாஸ் கான் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே கேரள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிக்க, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது கேரள அரசு. ஏழு காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவில் நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கேரள நடிகைகளின் குற்றச்சாட்டில் அடுத்து சிக்கப்போகும் தமிழ் நடிகர்கள் யாரோ என்கிற பேச்சுதான் தற்போது தமிழ் திரையுலகில் பேசுபொருளாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button