தமிழகம்

தமிழக உரிமைகளை மற்ற மாநிலங்களோடு பேசி தீர்ப்பாரா ஸ்டாலின்..?

பூம்புகார் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தவர் கலைஞர். அவர் காலத்தில் கண்ணகி கோவிலுக்கு விமோசனம் கிடைக்கவில்லை. அவர் மகன் முதல்வர் ஸ்டாலினின் நேச கேரள மாநில முதல்வர் பினராயி விஜனுயுடன் கலந்து கோவிலுக்கு பாதையும் கோவிலை சீர்திருத்தி கண்ணகியை தரிசிக்க பக்தர்களுக்கு எளிமையான வழி முறைகளை வழங்கி கலைஞருக்கு பெருமைசேர்க்கவேண்டும். கலைஞருக்கு விழா எடுக்கும் இந்த ஆண்டில் இதைசெய்தால் அவருக்கு பெருமை.

முதலில் தமிழக எல்லையான பளியன்குடி வழியாக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து மற்றும் சேவைகள் தொடங்கினால் மட்டுமே தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் வரும். இல்லை என்றால் ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலத்தின் உதவியுடன் மட்டுமே வழிபட வேண்டிய சூழ்நிலை தொடரும். இந்த ஆண்டு கோவிலுக்குச் செல்ல 850 ஜீப் இடுக்கி வனத்துறை மூலம் இயக்கப்பட்டது, ஆனாலும் கூட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தமிழக எல்லையில் தான் கோவில் உள்ளது என சர்வே கூறுகின்றன, இதை கேரள அரசும் ஒப்பு கொண்டு உள்ளது. இந்த கோவில் வரலாற்று சின்னம் என்பதை நினைவில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் மிக நல்லது.

கண்ணகி கோவில் பிரச்சனை மட்டுமல்ல, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் குமரி மாவட்ட நெய்யாறு அணைப் பிரச்சனை, அடவி நயினார் நீர்ப் பிரச்சனை, செண்பகவள்ளி தடுப்பணை, அழகர் அணை, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டப்பிரச்சனை, பாண்டியாறு – புண்ணம்புழா சிக்கலும், பம்பாறு, சிறுவாணி என 16 நதிநீர்ப் பிரச்சனைகள் மற்றும் அட்டப்பாடி தமிழர் பிரச்சனை, தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகளைக் கொட்டுதல் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நெருங்கிய நட்பால் பினராயி விஜயனிடம் பேசி இவைகளைத் தீர்க்கலாம். தீர்க்கப்படவும் வேண்டும். ஏனெனில் முதல்வர் ஸ்டாலின் கம்யூனிஸ்டுகள் மீது வாஞ்சையோடு கேரளத்தில் நடந்த சி.பிஎம் மற்றும் சி.பி.ஐ கட்சி மாநாடுகளில் உணர்வுப்பூர்வமாகக் கலந்து கொண்டு பினராயி விஜயன் உட்பட கம்யூனிஸ்ட் தலைவர்களை ஆரக்கட்டித் தழுவிய மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் செய்தியாக வந்ததெல்லாம் இன்றும் நினைவில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தப் பிரச்சனைகளை எல்லாம் ஸ்டாலின் மனது வைத்தால் நொடிப் பொழுதில் தீர்க்கலாம். விடியல் திராவிட மாடல் ஆட்சியில் இந்த உரிமைகள் தமிழகம் மீட்க வேண்டும்.

அதுபோலவே, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விழாவிற்கு அகமகிழ்ச்சியோடு முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த நிலையில், ராகுல், சித்தராமையா மூலமாக காவேரிப் பிரச்சனை, மேகேதாட், தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல், ஒக்கேனக்கல், கர்நாடகத்தில் மழைக் காலத்தில் வெள்ளமாகச் சேர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் குளங்களுக்கு வரும் நீர் வரத்தை தடுத்தது குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் இந்தத் தமிழக உரிமைகளுக்கு தீர்வு காணலாம். ஏனெனில் காங்கிரஸ் தோழமை மட்டுமல்ல ஸ்டாலினுடைய சகோதர பாசத்தையும் கொண்டது.

இன்னும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, அங்கு தெலுங்கில் அந்தரிகினி நமஸ்காராலு என்று பேசி தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தியதெல்லாம் உண்டு. இதன் வெளிப்பாடாக ஜெகன் மோகனிடம் பாலாறு பிரச்சனை அதோடு கணேசபுரத்தில் இருந்து தடுப்பணைகள் கட்டுவதை நிறுத்தவும், வேலூர் மாவட்டத்திற்கு பயன்படும் பொன்னி ஆறு நீர்வரத்தும், பழவேற்காடு ஏரிப் பிரச்சனையும் தமிழகத்தின் நீண்ட கால பிரச்சனைகளை ஜெகன் மோகன் ரெட்டியிடம் முதல்வர் ஸ்டாலின் தாராளமாகப் பேசலாம். தமிழக பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

அண்டை மாநில முதல்வர்கள் மூவருமே ஸ்டாலின் கோரிக்கை வைத்தால் நிச்சயமாக தீர்க்கக் கூடிய அளவில் சூழ்நிலைகள் இருக்கும் பொழுது தாராளமாக நல்ல பயன்யுள்ள முடிவுக்குக் கொண்டுவரலாம். திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பு மூன்று மாநில முதல்வர்களுடன் இவ்வளவு சகோதர நேயம் கொண்ட ஸ்டாலின், இதை இறுதிப்படுத்த மனது வைக்க வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி நிற்கிறது என்றும், 2024 தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நெகிழ்வாகவும் ஸ்டாலின் கூறினார்.

எனவே, ஸ்டாலின் தமிழக உரிமைகள திராவிடக் குடும்பத்தின் நிலப்பரப்பில் உள்ள கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்ளோடு பேசி தீர்க்கட்டும்.

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button