கரசாமியின் அருள் பலித்ததா ? சறுக்கியதா ?.! “கர” படத்தின் விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம் எஸ் பாஸ்கர், ஶ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கர”.
கதைப்படி.. திருவெறும்பூரில் இரவில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறார் கரசாமி ( தனுஷ் ). எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்கிறார். அந்த வீடு காங்கிரஸ் எம்எல்ஏ வீடு என்பதால் போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, டிஎஸ்பி பரதன் ( சுராஜ் வெஞ்சரமூடு ) தலைமையில் சிறையில் அடைக்க தீவிரமாக செயல்படுகிறது. இதனை உணர்ந்த கரசாமி டிஎஸ்பி பரதனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறார். பின்னர் தனது காதலி செல்வியுடன் ( மமிதா பைஜூ ) ஆந்திராவில் ஹோட்டலில் வேலை செய்கிறார். வருமானம் பத்தாததால் சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்க வங்கியில் கடன் கேட்கிறார். கிடைக்காததால் சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்று தொழில் செய்யலாம் என, மனைவியிடன் இராமநாதபுரம் வருகிறார்.

கிராமத்தில் மழை பொய்த்துப் போன காரணத்தால், விவசாயமும் இல்லை. பின்னர் தங்களது நிலத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து டிராக்டர் வாங்கி விவசாயம் செய்கின்றனர். அரபு நாடுகளில் போர் நடைபெறுவதால் டீசல் கிடைக்காததால், டிராக்டரும் இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. வங்கி நிர்வாகமும் நிலத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்புகிறது. இந்த சூழலில்தான், கரசாமி தனது தந்தை கே எஸ் ரவிக்குமாரை பார்க்க வருகிறார்.
அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை..
நாயகன் தனுஷ் தனது கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, அதே சமயம் படம் முழுவதையும் தானே சுமந்து செல்கிறார். இன்றைய சூழலில் நடிப்பு அசுரன் என கலைத்துறையினரால் பாராட்டப்படும் நடிகர் தனுஷ். இவரது படங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்திருக்கிறார். இப்படிப்பட்ட திறமையான கலைஞனுக்கு சுவாரஸ்யம், லாஜிக் இல்லாமல் நகரும் இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் ஏனோ தெரியவில்லை.

இயக்குநர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்த கதைக்கு, அதாவது திருடனாக நடித்து அதேயே நியாயப்படுத்தும் கதாப்பாத்திரத்துக்கு, வளரும் நாயகர்களே பொருத்தமாக இருக்கும் பட்சத்தில், தனுஷ் போன்ற நாயகனின் புகழையும், திறமையையும் விரயம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
கே எஸ் ரவிக்குமார், எம் எஸ் பாஸ்கர் இருவரும், இதுவரை பார்த்திராத புதுவிதமான தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மமிதா பைஜூ, கருணாஸ் இருவரையும் இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பும் பிரமாதம். ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் பிருத்வி பாண்டியராஜன், ஶ்ரீஜா ரவி இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜீவி பிரகாஷ் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சிறப்பு.




