தமிழகம்

பல்லடம் மோசடி வழக்கில் முக்கிய நபர் தற்கொலை..!

பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி கவுண்டரின் மகன் சிவக்குமார். அண்ணன் விஜயகுமார் மற்றும் அண்ணன் மகன் ராகுல் பாலாஜி ஆகிய மூவரும் சேர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தொழில் பங்குதாரர்களாக ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரித்து பட்டை நாமம் போட்டுவிட்டு கம்பி நீட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கடனில் தத்தளிக்கும் குடும்பத்தின் விபரங்களை இடைத்தரகர்கள் மூலமாக பெற்றுக்கொண்டு அவர்களை நேரில் சந்தித்து தன்னை தொழில் அதிபராக அடையாளப்படுத்திக்கொண்டு சொத்துக்கள் மீது கடன் பெற்றுத்தருவதாகவும், சொத்தை தன் மீது கிரையம் தந்தால் தனது தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு மாதம் தோறும் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டித்தருவதாக ஆசைவார்த்தை கூறுவாராம். பின்னர் தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று நம்பிக்கை வரவழைப்பது போன்று பேசி நயவஞ்சகமாக சொத்தை சிவக்குமார் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு பைசா கொடுக்காமல் அபகரித்துவிட்டு தலைமறைவாகிவிடுவது இவரது வழக்கம் என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் (48), என்பவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்க எண்ணி திருப்பூரை சேர்ந்த தமிழரசனை அணுகியுள்ளனர். பின்னர் தமிழரசன் சிவக்குமார் மற்றும் பிரவினாவுடன் சேர்ந்து நம்பிக்கையாக பேசி குமரேசன் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து 2 கோடி கடன் பெற்று குமரேசனுக்கு தராமல் மோசடி செய்ததோடு தனியார் பைனான்சிலும் ரூ. 15 லட்சம் பெற்று ஒரு தவணை கூட கட்டாமல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனிடையே பல ஆண்டுகளாக போராடி கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு 1102/2022 ஆக வழக்கு பதியப்பட்டு சிவக்குமார் மற்றும் பிரவினாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்து தலைமறைவான தமிழரசனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் திருப்பூரை சேர்ந்த பால் வியாபாரி பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 4 கோடி அளவிற்கு சிவக்குமார், விஜயகுமார், ராகுல்பாலாஜி மற்றும் பிரவினா, தமிழரசன் ஆகியோர் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழரசன் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் திடீரென குடும்ப சூழ்நிலை காரணமாக தமிழரசன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும் வேறு ஏதாவது அழுத்தம் காரணமாக தமிழரசன் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button