தமிழகம்

இன்ஸ்டாகிராம் விபரீதம்! கர்ப்பமான பள்ளி மாணவி

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகிய கல்லூரி மாணவர் ஒருவர், மாணவி அனுப்பிய அரைகுறை ஆடை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை காளவாசல் பகுதியை 16 வயது சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு சம்பந்தமான நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்ட மடிகணினியில் மாணவி முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்.


லைக்கிற்காக தன்னுடைய வித விதமான ஆடைகள் அணிந்த புகைபடங்களை இன்ஸ்டா கிராமில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அப்போது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் அல்ஹசன் என்ற தனியார் கல்லூரி மாணவர், இன்ஸ்டாகிராமில் மாணவியை பின் தொடர்ந்ததாக கூறப்படுகின்றது.

அல்ஹசன் மாணவி பதிவிடும் புகைப்படங்களை வர்ணித்து மாணவியை கவர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பாக இணைந்து பழகியுள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் விரிவடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அல்ஹசனின் கமெண்டுகளை தேடும் நிலைக்கு மாணவியை தனது வலையில் வீழ்த்தியதாகவும், இருவரும் தங்களது செல்போன் எண்களை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இன்ஸ்டாகிராமில் இருவரும் தனிப்பட்ட கணக்கு வைத்துக் கொண்டு பழகிய நிலையில் அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்து அனுப்பினால் பாலிவுட் நடிகை போல இருப்பாய் என அல்ஹசன் கூறியதை உண்மை என நம்பி அந்த மாணவியும் தன்னை பல்வேறு கோணங்களில் அரைகுறையாக புகைப்படம் எடுத்து அல்ஹசனின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராமுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் மாணவியின் அலங்கோலமான படத்தை பார்த்த அல்ஹசன் அவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளான்.

சம்பவத்தன்று நேரில் சந்திக்கலாம் என கூறி நாமக்கல்லுக்கு சென்ற அல்ஹசன் அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளான். மாணவியை அமர்ந்து பேசலாம் என்று தான் தங்கி இருந்த விடுதிக்கு அழைத்துச்சென்று மாணவியிடம் அத்துமீறியுள்ளான், மாணவி அங்கிருந்து வெளியேற முயன்றபோது மாணவியை அந்த அறையில் பூட்டிவைத்து மிரட்ட தொடங்கி உள்ளான்.

தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் தனக்கு அனுப்பிய அறைகுறை ஆடை படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி அல்ஹசன் பணியவைத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை வெளியில் சொன்னாலும் படங்களை வெளியில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியதால் மாணவி என்ன செய்வதென்று தெரியாமல், விழிபிதுங்கி போய் பள்ளி விடுதிக்கு திரும்பிச்சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் மாணவி அடிக்கடி மயக்கம் தலைசுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனையின் போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அப்போது நடத்திய விசாரணையில் மாணவி அல்ஹசனின் மிரட்டலுக்கு பயந்து பலாத்கார கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. மாணவியின் வாக்கு மூலத்தின் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி மன்மதன் அல்ஹசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

படிக்கின்ற வயதில் மாணவிகள் வாட்ஸ் ஆப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கி எல்லை மீறிய பழக்கம் வைத்துக் கொண்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக நடந்திருக்கிறது இந்த சம்பவம்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button