பழனி அருகே பக்தர்கள் அலையில்.. கோலாகலமாக நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா !

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி அருகே கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 10ல்) சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். (ஜூன் 11ல்) அதிகாலை பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். பின்னர் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடி காணிக்கைசெலுத்துதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் செலுத்தினர். இன்று காலை 7 மணியளவில் முளைப்பாரி உடன் அம்மன் கரகம் கங்கையில் விடுதல் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் நெய்க்காரப்பட்டி R. வாடிப்பட்டி, அ. கலையம்புத்தூர், பாப்பம்பட்டி, சின்ன கலையம் புத்தூர், காவலப்பட்டி, பெருமாள்புத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பக்தர்கள் திரளாக அம்மனை வழிபட்டனர். பழனி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.