நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு ! பல்லடத்தில் பரபரப்பு !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நாகராட்சிக்குட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட ஜே.கே.ஜே காலனியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சாக்கடை கழிவு நீர் வெளியேற்றுவதற்கு பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் கழிவு நீர் வாய்க்கால் ஏற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே பல்லடம் நகராட்சி சார்பில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆயத்த பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் துவங்க அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கருத்து தெரிவிக்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்கள் சொந்த செலவில் கழிவுநீர் வெளியேற வாய்க்கால் அமைத்துள்ளதாகவும், தற்போது பல்லடம் நகராட்சி சார்பில் புதிதாக மழை நீர் வடிகால் அமைப்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் பாதிக்கபடுவதோடு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் மழை நீர் வடிகால் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர். பல்லடம் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




