தலைமைக்கு எதிராக செயல்பட்டவரின் மகனுக்கு, திமுக இளைஞரணி பதவியா !.? கொந்தளிக்கும் உசிலம்பட்டி திமுகவினர் !

மதுரை மாவட்டம் உசிலிம்பட்டியில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் நகர் செயலாளர் தங்கமலை பாண்டியின் மகன் கஜேந்திரநாத் என்பவருக்கு உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்குமாறு, தற்போதைய நகர் செயலாளர், திமுக மாவட்டச் செயலாளர் பரிந்துரை செய்ததால் உசிலம்பட்டி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், இளைஞர் அணி அலுவலகம் அன்பகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இதுசம்பந்தமாக உசிலம்பட்டி திமுகவினர் மத்தியில் விசாரித்தபோது… கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தலைமை அறிவித்த வேட்பாளரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர்மன்ற உறுப்பினர்கள், அதிமுக நகர் செயலாளர் துணையோடு தங்கமலை பாண்டியன், பழனியம்மாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்களோடு கூட்டு சேர்ந்துகொண்டு திமுக வேட்பாளரை தோற்கடித்தனர். இதனால் தங்கமலை பாண்டி உள்ளிட்ட திமுகவினர் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தங்கமலை பாண்டியின் மகனுக்கு, உசிலம்பட்டி திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பதவி வழங்கமாறு, தற்போதைய நகர் செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகிய இருவரும் பரிந்துரை செய்துள்ளனர். முன்னாள் நகர செயலாளரின் மகன் என்கிற காரணத்தை தவிர, அவருக்கு கட்சி பணியாற்றிய எந்தவொரு முகாந்திரமும் இல்லை.

மேலும் இவர்களது சம்பந்தி சரவணகுமார் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும், உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். அவர் அரசு கூடுதல் வழக்கறிஞர் வீர கதிரவனிடம் ஜூனியராக இருந்து வருவதால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உசிலம்பட்டி நகராட்சியில், நகராட்சி தலைவர் இல்லாததால், ஆணையர் துணையோடு, எந்தவொரு வேலையாக இருந்தாலும் தங்கமலை பாண்டியை மீறி நடைபெறாது. இவர்களுக்கு நகராட்சி ஆணையர் உடைந்தையாக இருந்து வருகிறார். நகராட்சி ஆணையரின் முறைகேடுகளை கண்டிக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலகத்தில் உள்ள நகராட்சி செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி பெண் கவுன்சிலரை நகராட்சி அலுவலகத்திற்கு வர விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக முதலமைச்சர், காவல்துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். இதையெல்லாம் திமுக தலைமைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் புகார் அனுப்பியுள்ளனர். இதற்குமேல் திமுக தலைமைதான் முடிவு செய்யவேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.