அரசியல்இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.. 27 ஆண்டுக்கால வரலாறு..!

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் முதல் நிகழ்வாக, மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்து, “பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் மோடி, “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நீண்ட நாட்களாக நடந்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் பலமுறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டாலும், மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாததால், இந்தக் கனவு முழுமையடையாமல் இருந்தது. இன்று இதை முன்னெடுத்துச் செல்வதற்காக, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் பணிக்காக கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி செயல்முறையை உலகம் அங்கீகரித்திருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’ (‘ழிணீக்ஷீவீ ஷிலீணீளீtவீ க்ஷிணீஸீபீணீஸீணீ கிபீலீவீஸீவீஹ்ணீனீ’) என்று அழைக்கப்படும். அதிக பெண்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை உறுப்பினர்களாக வருவதை இந்த மசோதா உறுதிசெய்யும். விளையாட்டு முதல் விண்வெளி வரை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இந்தியப் பெண்களின் பங்களிப்பை உலகம் கண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிப் பணியில் மேலும் மேலும் பெண்களும் இணைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

எனவே, இந்த மசோதா மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கை வகுப்பதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டது. செப்டம்பர் 19 ஒரு வரலாற்று நாள். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்தர்ப்பத்தில், சபையின் முதல் நடவடிக்கையாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெண்களின் அதிகாரத்துக்கான நுழைவாயில்களைத் திறப்பதற்கான தொடக்கமாகவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” எனப் பேசினார்.

பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.

அரசியலில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், சட்டத்தின் மூலம் அதை உறுதிசெய்ய வேண்டும் என்பது பற்றிய விவாதம் சுதந்திரத்துக்கு முன்னரும், அரசியல் சாசன சபையிலும் நடைபெற்றது. 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, அன்றைய மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா தலைமையில் 14 பேர்கொண்ட குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு ஏராளமான பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது. பல மாநிலங்களில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்குள் மகளிருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்கு, கட்சி எல்லைகளைக் கடந்து ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் அந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற எம்.பி-க்கள் முயன்றனர்.

ஆனால், சரத் யாதவ் போன்ற சில எம்.பி-க்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில், சரத் பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, உமாபாரதி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அந்தக் குழு, சில பரிந்துரைகளை அளித்தது. மீண்டும் 1996-ம் ஆண்டு, டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.

1998-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு வந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட எம்.பி-க்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அந்த ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்ய முயன்றபோது, ​​ஆர்.ஜே.டி எம்.பி-க்களான சுரேந்திர பிரகாஷ் யாதவ், அஜித் குமார் மேத்தா ஆகியோர் மசோதாவின் நகல்களைக் கிழித்தெறிந்தனர். அவர்களின் செயலுக்கு லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

1999-ல் வாஜ்பாய் மீண்டும் பிரதமரான பிறகு, `மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, ​​மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி அறிமுகப்படுத்தினார். அதற்கு, முலாயம் சிங் யாதவ், ரகுவன்ஷ் பிரசாத் சிங் உள்ளிட்ட எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2005-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி அரசு நடைபெற்றபோது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த சோனியா காந்தி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஐ.மு கூட்டணிக் கட்சிகளும், அந்த அரசுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிக் கட்சிகளும் கலந்துகொண்டன. பின்னர், மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள், பிற கட்சிகளின் தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை வழங்கும் மசோதா, 2008-ம் ஆண்டு மே 8-ம் தேதி பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு தனது அறிக்கையை 2009-ம் ஆண்டு, டிசம்பர் 17-ம் தேதி அளித்தது. மன்மோகன் சிங் அமைச்சரவை 2010-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், ஐ.மு கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளேயும், அமைச்சரவைக்கு உள்ளேயும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், மக்களவையில் மசோதா கொண்டுவரப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button