தமிழகம்

சிறார் ஆபாச பட நெட்வொர்க்.. 21 மாநிலங்களில் குழு.. : தஞ்சையில் முக்கிய புள்ளி கைது..!

பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாக சிபிஐ அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுச்சூழல் குறித்து பி.ஹெச்.டி படித்து வந்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான குழுவினர், கடந்த வாரம் பூண்டி தோப்பு கிராமத்துக்கு வந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி விசாரணை நடத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு, அவரை சிபிஐ அதிகாரிகள் காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தஞ்சாவூரில் உள்ள, மத்திய அரசின் கல்வி நிறுவன விருந்தினர் மாளிகையில் விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதால் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என்ற தகவல் பரவியது. இந்த தகவலை விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோரும் கூறினர். இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். இதனால்தான் சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர் என தெரிய வந்தது.

இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சாவூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிபிஐ அதிகாரிகள் மற்றும் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நாட்கள் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கவும், மார்ச் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை சிறையில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீஸார் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் முதலில் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அவதூறாக தகவல் அனுப்பியதாக கூறி அவரை தனியாக வைத்து விசாரித்தனர். விசாரணை எதற்காக நடைபெறுகிறது என ரகசியமாக வைத்திருந்தனர்.

தற்போது விசாரித்தபோது, விக்டர் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு சிறார்களின் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இண்டர்போல் போலீஸார் மத்திய அரசிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. இதில் இந்தியாவில் 21 மாநிலங்களில் விக்டர் ஜேம்ஸ் ராஜா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து சிறார் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில் விக்டர் ஜேம்ஸ் ராஜா 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர் என்றனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button