இணையத் தொடர்

திருமணத்திற்கு முன் ஏழு நாட்கள் ஒத்திகை பார்த்த இளம் ஜோடி !..? “பானி பூரி” விமர்சனம்

ஷார்ட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள “பானி பூரி” இணையத் தொடரில், லிங்கா, சம்பிகா, குமரவேல், கனிகா, வினோத் சாகர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். எட்டு எபிசோடாக வெளியாகியுள்ள இந்த தொடரை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார்.

கதைப்படி… லிங்கா தனது நண்பருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காதலைத் துண்டித்ததாக லிங்காவின் கைபேசிக்கு தகவல் வர, உடனடியாக காதலியைத்தேடி அவரது வீட்டிற்குச் செல்கிறார். அங்கு சம்பிகாவின் தோழி காதலித்து திருமணம் செய்தவரை பிரிந்து மன ஆறுதலுக்காக அவரது வீட்டில் இருக்கிறார். இவரது கதையைக் கேட்டால்தான், காதலிக்கும்போது கிடைக்கும் அன்பு, திருமணத்திற்கு பிறகு கிடைப்பதில்லை என சம்பிகா லிங்காவுடனான காதலைத் துண்டித்தாக லிங்கா உணர்கிறார்.

இந்தப் பிரச்சினையில் சம்பிகாவின் தந்தை குமரவேல் தலையிட்டு ஒரு யோசனை வழங்குகிறார். அதாவது லிங்காவும், சம்பிகாவும் தனியாக ஒரு வீட்டில் ஏழு நாட்கள் கனவன், மனைவிபோல் தங்கியிருக்க வேண்டும். அந்த ஏழு நாட்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு காலம் பூரா வாழ்க்கை நடத்த முடியுமா என்பதை முடிவெடுக்கலாம் எனக் கூறுகிறார். இருவரும் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு ஒரு வீட்டில் இருவரும் தங்குகிறார்கள். ஏழு நாட்களுக்குப் பிறகு இவர்களது காதல் என்னவானது ? சேர்ந்து வாழ்ந்தார்களா ? அல்லது பிரிந்தார்களா ? என்பது மீதிக்கதை…

நாயகன் லிங்கா, நாயகி சம்பிகா இருவரும் ஒருவரையொருவர் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்றே சொல்லலாம். குமரவேல் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் ஒப்பிட முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார். வினோத் சாகரின் எதார்த்தமான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒட்டுமொத்தத்தில் குடும்பத்தினருடன் காணவேண்டிய இணையத் தொடர் “பானி பூரி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button