ஆட்சி மாற்றம் ! மணல் திருட்டும், அதிகாரிகளும் மாறாத அவலம் ! பொதுமக்கள் வேதனை !

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என, கடலூர் மாவட்டம், திருமுட்டம் கள்ளிபாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். கள்ளிபாடி சாலையில் உள்ள குன்னத்தேரியில் வண்டல் மண் எடுப்பதாகக் கூறி, அரசு விதித்துள்ள விதிகள் எதையும் கடைப்பிடிக்காமல், நிர்ணயித்த அளவைவிட அதிகமாக டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் மணலை அள்ளிச் செல்கின்றனர்.

கள்ளி பாடி சாலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலையில் மணல் அள்ளிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றனர். அந்த வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல்தான் வாகனங்களை இயக்கி விடுகிறார்கள்.

இதுசம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இனிமேலாவது பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என அப்பகுதியினர் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் !




