மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு தங்க நாணயம் பரிசு !

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 16 மே ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் பயின்ற நூர்ஜகான் என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் அளவிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.
இவரது பெற்றோர் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர். மாணவியின் சொந்த ஊர் பார்த்திபனூர் அருகே பரளை கிராமமாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்று பரளை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனை அடுத்து மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி நூர் ஜகானுக்கு பரளை ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து தங்க நாணயம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதேபோல் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கிராமபுறத்தை சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம் வழங்கி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.