ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு !

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு மஞ்சூரில் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.தற்போது இவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியராக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மஞ்சூர் அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவிகள் 29 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி பயின்ற மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சந்தித்துக் கொண்டனர். தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களுடன் ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்கள் படித்த காலம் தற்பொழுது செய்து வரும் பணி குறித்து பேசினர்.

மேலும், தங்களுக்குள் ஒரு விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தாங்கள் பயின்ற காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்சிப் படுத்தப்பட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்குள் இனிப்புகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பாக நிதி திரட்டி ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துச் சென்றனர்.