மாவட்டம்

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு ! கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது !

ஒன்றிய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்க அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் அரசியல் தலைமக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும்  மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளா வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் கேரள மக்களுக்கு செய்வோம்.

இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல, ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக மோடி அரசு தங்களுடைய ஆட்சி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர்.
இவர்களை ஆதரிக்கும் காரணத்தினால் மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர்.

ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான வரியை செலுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதானி அம்பானி குடும்பங்கள் மேலும் மேலும் வளர்வதற்குரிய வகையில், இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது என தெரிவித்தார்.‌

அதனைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ( சிபிஎம்) ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒன்றிய அரசின் அலுவலகம் முன்பு  போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசை பொருத்தவரை ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தன்னுடைய பெண்ணுக்கு மணவிழா நடத்திய அம்பானி அதானிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு சலுகை அளிக்கக்கூடிய விதமாகத்தான் மோடி அரசின் பட்ஜெட் இருந்துள்ளது.

வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கோ, நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாப்பதற்கோ, சிறு குறு தொழில்களை பாதுகாப்பதற்கோ, விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது. உத்திர பிரதேசத்தில் 60 ஆயிரம் பேருக்கு 47 லட்சம் பேர் காவல்துறை வேலைக்காக மனு அளித்துள்ளனர். இதுவே நாடு முழுவதும் வேலையில்லாமல் வாழக்கூடிய இளைஞர்கள் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த சூழலில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய பட்ஜெட்டுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கோட்பாடான கூட்டாட்சியில், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் இடை குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்‌.

– ஜான்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button