தமிழகம்

தொடரும் மீனவர் படுகொலை தடுக்குமா அரசு?

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குவதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இரு ஆண்டு இடைவெளியில், மேலும் ஒரு தமிழக மீனவர் சிங்களப் படையினரால் தாக்கிக் கடலில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வங்கக் கடலில் நெடுந்தீவுக்கு அருகிலும், கச்சதீவுக்கு அருகிலும் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படை தொடர் தாக்குதலை நடத்தியது. இந்த நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை சிங்களப் படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்திய சிங்களப் படைகள், அவர்களின் இரு படகுகள் மீது தங்களின் படகுகளைக் கொண்டு மோதின. அத்தாக்குதலில் இரு படகுகளும் தகர்ந்து கடலில் மூழ்கின. அப்படகுகளில் இருந்த மீனவர்கள் 9 பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், அவர்களில் 8 பேரை மட்டும் சிங்களப் படை மீட்டு கைது செய்தது.

அவர்களைத் தவிர சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற மீனவர் கடலில் மூழ்கிவிட்ட நிலையில், அவரை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய சூழலில் மீனவர் முனியசாமி உயிரிழந்த நிலையில் சடலமாக நெடுந்தீவு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த உடல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வைத்துக் கொண்டால்கூட, அதிகபட்சமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை மட்டும்தான் இலங்கை அரசால் செய்ய முடியும். ஆனால், இலங்கைப்படையினர் அதைச் செய்யாமல் ராமேஸ்வரம்  பகுதி மீனவர்களின் இரு படகுகளையும் தங்கள் படகுகளால் மோதி அழித்ததால் மீனவர் முனியசாமி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீனவர்களின் படகுகளைத் தாக்கி மூழ்கடித்தல், கடலில் விழுந்து தத்தளித்த முனியசாமியை மீட்காமல் விட்டுச் சென்றது உள்ளிட்ட சிங்களப் படைகளின் செயல்களால் அவர் உயிரிழந்தார். அந்த வகையில் முனியசாமியின் மரணம் திட்டமிடப்பட்ட கொடூரக் கொலைதான். இதற்கு இலங்கை கடற்படைதான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நடந்த நிகழ்வுகளை இலங்கை அரசு தலைகீழாக மாற்றிச் சொல்லியிருக்கிறது. தமிழக மீனவர்கள் நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என்றும், அவ்வாறு கவிழ்ந்த படகுகளிலிருந்து 8 மீனவர்களை உயிருடன் மீட்டதாகவும் இலங்கை கடற்படை அதன் அதிகாரபூர்வச் செய்தியில் கூறியுள்ளது. மீனவர் படுகொலையை மறைப்பதற்காகவே இலங்கை இவ்வாறு கூறுகிறது.

2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 6 ம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 வயது மீனவர் பிரிஸ்டோவை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். அவரது படுகொலைக்கு இரு ஆண்டுகளாக நீதி கிடைக்காத நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளைத் தகர்த்து இன்னொரு மீனவரையும் சிங்களப் படை கொன்றுள்ளது.

இந்திய-&இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்களிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி கொழும்பில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுகளின் போது, “எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இந்தியக் கடலோரக் காவல்படையால் இலங்கை மீனவர்களோ, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களோ கைது செய்யப்படும்போது உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தாக்கப்படுவதோ, உயிரிழப்புகளோ ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் மீனவர் பிரிஸ்டோ சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வும், இப்போது அப்பாவி மீனவர் முனியசாமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். 1980-ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 35 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் 800 மீனவர்களை சிங்களப் படையினரின் கொலை வெறிக்குத் தமிழகம் பலி கொடுத்திருக்கிறது. இன்னும் எத்தனை பேரை பறிகொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமானால், இந்தியாவின் வலிமையை இலங்கை புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அதற்காக, மீனவர் படுகொலை குறித்து இலங்கை கடற்படையினர் மீது இந்தியா வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதுமட்டுமன்றி, கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை அரசு விடுதலை செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உயிரிழந்த மீனவர் முனியசாமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button