வெளிநாட்டு நிறுவனங்களிடம் 400 கோடி ஏமாற்றிய கல்லால் குழுமம், தொழிலதிபர்கள் கைது
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2022/09/IMG-20220920-WA0077-540x470.jpg)
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை கவர்தல்.. போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல உலக நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தில், பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் கோடி கணக்கிலான ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையின் போது, ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி கல்லால் குழும நிறுவனம் செயல்படவில்லை. இந்நிலையில் கல்லால் குழும நிறுவனம் போலியான ஆவணங்களை காட்டி முதலீடுகளைப் பெற்றதை பெட்டிகோ கமர்சியோ இன்டர்நேஷனல் நிறுவனம் கண்டறிந்தது.
மேலும் இந்த நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாய் வரை ஏமாற்றி, நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக கல்லால் குழும நிறுவனத்தின் மீது பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை காவல் துறை ஆணையரிடத்தில் புகார் அளித்தது. இதனை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரை செப்டம்பர் 16ஆம் தேதி அன்று, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதியரசர், குற்றம் செய்தவர்களுக்கு15 நாள் நீதிமன்ற காவல் வைத்து விசாரிக்கும் படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லால் குழும நிறுவனத்தைச் சார்ந்த இவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களிடம் வர்த்தக உடன்பாடு என்ற பெயரில், கோடிக்கணக்கிலான ரூபாயை ஏமாற்றி, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருப்பதால், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளை, தங்களின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்திருப்பதாகவும், விரைவில் இந்த மோசடியில் ஈடுபட்ட விஜயகுமாரன் மற்றும் அரவிந்த ராஜ் ஆகியோர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.