தமிழகம்

திருடிய பைக்கில் வந்து, உரிமையாளரிடமே உதவி கேட்டு உதை வாங்கிய திருடன்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் மாயமாகியுள்ளது.

இதுபற்றி அவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடு போன அவரது மோட்டார்சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. வாலிபர் ஒருவர் முருகனிடம் வந்து தனது மோட்டார்சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்‌ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்து, தனது மோட்டார் சைக்கிளையே திருடி வந்து விட்டு தன்னிடமே அதனை ரிப்பேர் பார்க்க உதவி கேட்கிறானே என்று எண்ணிய அவர் வாலிபரை மடக்கி பிடிக்க போராடியுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதனை அடுத்து முருகன் தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதையும், அதனை திருடிச் சென்றவன் சிக்கிக் கொண்ட விவரத்தையும் தெரிவித்துள்ளார். உடனே பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30) என்பதும் தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாலசுப்பிரமணியன் மீது பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 18 வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. திருடிய பைக்கில் வந்து உரிமையாளரிடமே உதவி கேட்டு பொதுமக்களிடம் தர்ம அடிவாங்கி போலீசில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button