தமிழகம்

‘கட்டடத்தில் ரத்தக்கறை வந்தது எப்படி?’- : கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் எழுப்பும் சந்தேகங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு உத்தரவிட்டார். மாணவி மரணம் தொடர்பான வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாணவியின் பெற்றோர் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஜூலை 13 ஆம் தேதி காலையில் பள்ளியின் தாளாளர் எனக்கு போன் செய்து “உங்கள் மகள் மாடியில் இருந்து குதித்து விட்டார்” என்று தெரிவித்தார். உடனே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறினார். பதறிப்போய் மருத்துவமனைக்கு ஓடினோம். அங்கு போய் பார்த்தால் பள்ளி தரப்பில் ஒருவர் கூட இல்லை. என் மகளை பற்றி விசாரித்தபோது உங்கள் மகள் இறந்துதான் இங்கு கொண்டுவரப்பட்டார் என்று மருத்துவர் தெரிவித்தார். அப்போதுதான் இது “திட்டமிட்ட கொலை” என்று சந்தேகம் எழுந்தது.

இறந்த மகளின் முகத்தையாவது காட்டுங்கள் என்று கேட்டதற்கு உடல் பிணவறைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது அவள் உடல் உப்பத் துவங்கியிருந்தது. கைகளை இறுக்கமாக மூடியிருந்தாள். மாடியில் இருந்து தற்கொலைக்கு முயலும்போது கைகளை விரிக்கத்தானே செய்வார்கள். இது எங்களுக்கு பெரிய சந்தேகத்தை கிளப்பியது. உடனே பள்ளிக்கு சென்ற போது பலர் கும்பலாக அங்கு ஏற்கனவே குவிந்திருந்தனர். போலீசும் இருந்தனர். நாங்கள் கேட்கும் முன்பே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள், எதுவும் சொல்லாமல் இருந்தது அவர்கள் மீது “ஏதோ” தவறு இருப்பதை தானே உணர்த்துகிறது. மேலும் என் மகளின் ரத்தக்கறைகள் அந்த கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்ததையும் நாங்கள் பார்த்தோம்.

இரவு 10.30 மணிக்கு அவள் மாடியில் இருந்து குதித்ததாக சிலர் சொன்னார்கள். அது ஒன்றும் நள்ளிரவில்லையே! எங்களுக்கு உடனடியாக தகவலை சொல்லி இருக்கலாமே! அல்லது அடுத்த நாளாவது எங்களிடம் முழுவதையும் விளக்கி இருக்கலாமே! எதையுமே யாரும் செய்யவில்லை., அவளது தோழிகள் சிலருக்கு உண்மை தெரிந்தாலும் பயந்து அதை பற்றி பேச மறுக்கிறார்கள்.

பள்ளியின் நுழைவுவாயில் முதல் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும் பள்ளி அது. ஆனால் எந்த பதிவையும் அவர்கள் காட்டவில்லை. அனைத்து தகவல்களும் முன்னுக்கு பின் முரணாகவே இருந்தது.

கலெக்டர், போலீஸ், பள்ளி நிர்வாகம் மூவரும் ஒன்றாக அமர்ந்து, எங்களை அழைத்து “இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று விளக்கியிருந்தால் “ஒரு மணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை இது”. ஆனால் அனைத்தும் மறைவாகவே நடந்தது. 18 நாள் ஆகிவிட்டது. ஒரு உண்மையாவது வெளியாகி இருக்கிறதா?

எனது மகளிடமிருந்து கடிதம் கைப்பற்றியதாக சொன்னார்கள். அது உண்மையென்றால் முதல் நாள் நாங்கள் போய் கேட்டபோது “உன் மகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துவிட்டாள்” என்று கடிதத்தை காட்டி இருக்கலாமே., 14 ஆம் தேதிதான் என்னிடமே காண்பித்தார்கள். அதுவும் மொபைலில் போட்டோவாகத் தான். அது திட்டமிட்டு யோசித்து யோசித்து எழுதப்பட்ட கடிதம். அது என் மகள் கையெழுத்தே கிடையாது. அந்த கடிதத்தில் ஆசிரியர்கள் தந்த அழுத்தத்தால் அவள் தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது பற்றி முன்னரே ஒரு வார்த்தை கூட என் மகள் என்னிடம் கூறவில்லை. மரணத்திற்கு 3 நாள் முன்பு கூட என் மகள் மிக இயல்பாகவே என்னிடம் பேசினாள்

இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் கணித ஆசிரியர் கீர்த்திகா, பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஸ்ரீ பிரியா உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வருகின்ற 10ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக மாணவி உயிரிழக்கும் முன்பு பள்ளியில் மாணவி வகுப்பறையில் நடந்து செல்லும் வீடியோ எனக் குறிப்பிட்டு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாணவி பள்ளி வளாகத்தில் மாடியில் ஏறிச் செல்லும் வீடியோவும் இரண்டாவது வீடியோவாக வெளியானது.

தற்பொழுது மாணவி இறந்ததற்கு பிறகு கடந்த 13ஆம் தேதி காலை 5:30 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் நைட்டி அணிந்த மூன்று பெண்கள் மாணவியை தூக்கிச் செல்வது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் சூழலில் தாங்கள் எந்த வீடியோவையும் வெளியிடவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியானால் இந்த வீடியோக்கள் பள்ளி சார்ந்த நபர்களால் வெளியிடப்பட்டனவா அல்லது பள்ளி வளாகத்தை சூறையாடப்பட்ட நாள் அன்று அங்கிருந்து திருடி செல்லப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியின் செயலாளர் சாந்தி அனைத்து சிசிடிவி ஆதாரங்களையும் போலீசிடம் ஒப்படைத்து விட்டோம் என்று ஏற்கெனவே அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வீடியோ வெளியிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்துவோம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்ப வழிவகுத்து இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button