சினிமா

நடிகை மீரா மிதுனின் அட்டகாசத்தால் தாமதமான “பேய காணோம்” படப்பிடிப்பு

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில்  தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில்  இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்   ” பேய காணோம் “.  தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவினை படக்குழு கொண்டாடியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம்,  பல இன்னல்கள் தடைகளை கடந்த நிலையில் தற்போது படப்பிடிப் முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது.

இந்நிகழ்ச்சியில் 
தயாரிப்பாளர் R. சுருளிவேல் பேசும்போது…
இயக்குநர் செல்வ அன்பரசன் இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். ஆனால் அவர் பற்றி பொதுவெளியில் நல்ல அபிப்ராயங்கள் இல்லை அதனால் வேண்டாம் என்றேன். ஆனால் இயக்குநர் அவர் பொருத்தமாக இருப்பார் படத்திற்கு பலமாக இருக்கும் என்றார் நானும் சரி என்றேன். ஆனால் அவர் வந்ததிலிருந்தே பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். இயக்குநர் மீதே குற்றச்சாட்டு கூறினார். படப்பிடிப்பில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன் விமான டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்பார். அவர் நிறைய தொல்லைகள் தந்தார். முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் முதல்வர் ஆவதை நான் தடுப்பதாக என் மீதும் குற்றம் சுமத்தினார். படம் பாதி எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை, அவரை  போன்ற ஒருவரை வைத்து கொண்டு  இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விசயம்.

இப்படத்திற்கு பல தடைகள் வந்தது அதையெல்லாம் கடந்து இன்று படத்தை முடித்துள்ளோம் அதற்காகத் தான் இந்த வெற்றி விழா. எங்கள் படம் நல்லதொரு காமெடி படமாக வந்துள்ளது. இப்போது திரையரங்குகளில் சிறு படங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. விக்ரம் படத்திற்கும் என் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலை என்பது அநியாயம். 50 ரூபாய் டிக்கெட் வைத்தால் என் படத்திற்கும் கூட்டம் வரும். இதை தயாரிப்பாளர் சங்கங்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயக்குநர் செல்வ அன்பரசன் பேசும்போது…
நான் செய்த மிகப்பெரிய தவறும் மிகப்பெரிய சரியும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியது தான். அவர் பேயாக காட்ட மீரா மிதுன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன் ஆனால் அவருக்கும் எனக்கும் வந்த முதல் நாளே சண்டை. அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சமாதானம் பேசி ஒழுங்காக ஷூட்டிங் வந்தார். நன்றாகவும் நடித்து கொடுத்தார்.  அதன் பிறகு ஒரு கேஸில் ஜெயிலுக்கு போய் விட்டார். அவர் வெளியே வந்த பிறகு எப்படியோ படத்தை எடுத்து முடித்து விட்டோம். மற்ற நடிகர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.  இந்தப்படம் பல தடைகளை சந்தித்தது ஆனாலும் எங்களை சுற்றி சில நல்ல உள்ளங்கள் இருந்ததால் எங்களால் படத்தை முடிக்க முடிந்தது. வடிவேலு பாணியில் இவ்வளவு அடியும் வாங்கிட்டு உசுரோட இருக்கனே   எனக்கு தான் இந்த கப்பு என்பது போல இவ்வளவு பிரச்சினையும் தாண்டி இந்த படத்தை முடித்ததே பெரிய  சக்சஸ். அதனால் தான் இந்த வெற்றி விழாவை வைத்தோம். இந்தப்படத்தில் நல்ல கதை இருக்கிறது என்றார்.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி,  கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம்,  முல்லை, ஜெயா டிவி ஜேக்கப் ஆகியோர் நடித்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button