சினிமா

ரசிகர்களின் கரவொலி தான் “மாயோன்” படத்திற்கான பாராட்டுக்கள் – நடிகர் சத்யராஜ்

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, ‘மாயோன்’ படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், ‘ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு’ என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி, படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறது. இந்த தருணத்தில் தமிழ் திரை உலகில் கடவுள் மறுப்பு கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையவரும், பெரியாரிய சிந்தனையாளருமான புரட்சி நடிகர் சத்யராஜ், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகமும், அறிவியலும் கலந்த ‘மாயோன்’ திரைப்படத்தை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் கண்டுகளித்தார்.

படம் நிறைவடைந்ததும் ‘மாயோன்’ குறித்து சத்யராஜ் பேசுகையில், ” மாயோன் திரைப்படம் எங்களுக்கு பிடித்ததைப் போல் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. படம் முடிவடைந்ததும் இருக்கைகளில் எழுந்துநின்று கைதட்டினார்கள். இந்த கைதட்டல்கள் தான் படத்தின் உண்மையான வெற்றிக்கு கிடைத்த சாட்சி. இந்தப்படத்தில் சிபி சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களால் தான் என்னுடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்திலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை இசைஞானி அளித்திருக்கிறார். இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் தெளிவாக திட்டமிட்டு படத்தை இயக்கி இருக்கிறார்கள். அனைத்து வகையிலும் சிறப்பாக அமைந்திருக்கும் இந்த படம் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்கள் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

இதனிடையே தமிழகத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற ‘மாயோன்’ திரைப்படம் ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கு மொழியில், 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதுதொடர்பாக ஹைதராபாத்தில் ஜூலை 1ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக நடித்து தெலுங்கு மக்களின் அபிரிமிதமான அன்பை பெற்றிருக்கும் புரட்சி நடிகர் சத்யராஜ் கலந்துகொள்கிறார். இவருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button