சினிமா

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா

நடிகர் அக்ஷய் குமாரின் நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் சூர்யா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. நீண்ட நாட்களாக பெரிய வெற்றியை எதிர்பார்த்த நடிகர் சூர்யாவுக்கு, இந்தப் படம் மாபெரும் வெற்றியுடன் அடுத்த தளத்திற்கு சூர்யா செல்ல துணைப் புரிந்தது. ஏர் டெக்கான் எனும் விமான நிறுவனத்தை துவக்கியவரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டது.

படம் வெளியானது முதல் தற்போதுவரை சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை இந்தப் படம் குவித்து வருகிறது. ‘சூரரைப் போற்று’ படம் இந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் ரீமேக் ஆக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவின் மாறா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அஜய்தேவ்கன், ஜான் ஆப்ரஹாம், அக்ஷய்குமார், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக அக்ஷய் குமார் கதாநாயகனாக உறுதி செய்யப்பட்டார்.

இந்தியில் எடுக்கப்படும் ‘சூரரைப் போற்று’ படத்தை, சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெயிண்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே அக்ஷய்குமாருடன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கடைசி சில நிமிடங்களில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து மிரட்டிய சூர்யா, இந்தப் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாகவே இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button