அரசியல்

அமமுகவில் இருந்து விலகி ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தி.மு.க-வில் மீண்டும் இணைந்துள்ளார். அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி, எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அதன்பின்னர் தினகரனின் அ.ம.மு.க அமைப்பில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில்தான் அவர் தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல் பரவியது. முதலில் இது வதந்தி என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் தினகரனின் அறிக்கை, அவர் அ.ம.மு.க-வில் இருந்து விலகுவதை உறுதி செய்தது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்கள் 2000 பேருடன் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்காக கார், பஸ், வேன் என பல்வேறு வாகனங்களில் இருந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கரூரில் இருந்து காலை முதலே அண்ணா அறிவாலயம் வரத்தொடங்கினர்.
செந்தில் பாலாஜி தனது அரசியல் பயணத்தை தொடங்கியதே தி.மு.க-வில் இருந்துதான். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அவர் மீண்டும் தி.மு.க.வுக்கு திரும்பியுள்ளார். செந்தில் பாலாஜி அண்ணா அறிவாலயம் வந்ததும், பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு அடிப்படை உறுப்பினர் படிவத்தை வழங்கினார். அதனை நிரப்பி கையெழுத்திட்டு அவர் திமுகவில் இணைந்தார்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button