அரசியல்தமிழகம்தமிழகம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவு…
கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரின் முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ரவீந்திரன் அளித்த புகாரில் பணம் பெற இடைத்தரகராக இருந்ததாக கூறப்படும் விஜய் நல்லத்தம்பியும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும், அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், தனக்கு தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

மேலும் விஜய் நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால் அனைவரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

புகார்தாரர் ரவீந்திரன் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி எம். நிர்மல்குமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் தற்போது ராஜேந்திர பாலாஜி கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பாலாஜி சில நிமிடங்கள் மட்டும் கலந்து கொண்டு உடனடியாக காரில் விரைந்து சென்றார். ராஜேந்திர பாலாஜி போலீசாரிடம் கைதாகமால் இருக்கவே ஆர்ப்படாட்டத்தின் நடுவில் அவர் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையே ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button