Featuredஅரசியல்தமிழகம்தமிழகம்

அயோத்திதாசரை ஏன் கொண்டாட வேண்டும்..?

அயோத்திதாசர் பண்டிதரின் 175 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அயோத்திதாசர் குறித்த விவாதங்கள் பேசப்பட்டு வருகிறது. திராவிடக் கட்சிகள் அயோத்தி தாசரை புறக்கணித்துவிட்டது. இந்த மணிமண்டபத்தை அவருக்கு எப்போதோ கட்டியிருக்க வேண்டும் என ஒரு சிலரும், அவர்தான் திராவிடத்தின் முன்னோடி அதை திராவிட கட்சிகள் எப்போதுமே மறுத்தது இல்லை என மற்றொரு சாராரும் விவாதித்து வருகிறார்கள். இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க அயோத்திதாசரை ஏன் கொண்டாட வேண்டும் என இளைய தலைமுறையினர் கேள்வி எழுப்புகின்றனர்.

17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவை நிர்வகித்து வந்தது கிழக்கிந்திய கம்பெனி. அதன்பிரதிநிதியாக மெட்ராஸ் மாகாணத்தில் வசித்துவந்தார் வெள்ளைக்கார அதிகாரி ஜார்ஜ் ஹாரிங்டன். இவருக்கு உதவியாளராகவும், சமயலராகவும் இருந்து வந்தவர் சிறந்த சித்தவைத்தியரான கட்டப்பன், கட்டப்பனின் மகன் கந்தசாமி குடும்பத் தொழிலான சித்தவைத்தியத்தில் அப்பாவைப் போலவே சிறந்துவிளங்கினார்.


1845 மே 20 ல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கந்தசாமிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் காத்தவராயன். காத்தவராயன் கல்வி கற்க பன்மொழிப் புலவர் அயோத்திதாச கவிராயரின் திண்ணை பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது தன் குருமீது உண்டான அதீத பற்றினால் காத்தவராயன் என்ற இயற்பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார். சென்னை ராஜதானியின் அப்போதைய கலெக்டராக பிரான்சிஸ் பைட்லே, இவருக்கு தமிழ் மீது பற்றும் தேடலும் இருந்து வந்தது. தமிழ் இலக்கியச் சுவடுகளை சேகரிப்பதில் முனைப்புடன் இயங்கி வந்தவர் கெல்லிஸ். இவரது நண்பர்தான் ஹாரிங்டன். கெல்லிசின் தமிழ் பற்றை அறிந்த கந்தப்பன் வீட்டு பரணில் மூட்டை கட்டியிருந்த ஓலைச் சுவடிகளை தூசு தட்டி ஹாரிங்டனிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

அந்த ஓலைச்சுவடிகளை கெல்லிஸ் நூலாக கொண்டுவந்தார். 1812 ஆம் ஆண்டு வெளியான அந்த நூலின் பெயர் திருக்குறள். வெள்ளைக்கார துரையான ஹாரிங்டன் தொழில் நிமித்தமாக நீலகிரிக்கு பணிமாறுதல் பெற்றார். கந்தப்பனின் குடும்பமும் அவருடன் நீலகிரிக்கு குடிபெயர்ந்தது. காத்தவராயன் எனும் அயோத்திதாசருக்கு திருமண வயது வந்ததும் தோடர் இனத்துப் பெண்ணை மணமுடித்து வைத்தனர். இவர்களுக்கு கண்பார்வை அற்ற குழந்தை பிறந்தது. பிறந்த சில தினங்களில் இந்த குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த சோகத்திலேயே அயோத்திதாசர் மனைவியும் காலமானார். இந்த சோகத்தில் பர்மா சென்று விடுகிறார் அயோத்திதாசர்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பும் அயோத்திதாசர் தான் பல புரட்சிகளுக்கு விதை தூவியவராக அறியப்படுகிறார். முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு இரட்டை மலை சீனிவாசனின் தங்கை தனலெட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் அயோத்திதாசர். ஆதிசங்கரரின் கொள்கைகளை உள்வாங்கிய அயோத்திதாசர் 1876 ஆம் ஆண்டு அத்வைதந்தா சபையை தோற்றுவிக்கிறார். இதன்மூலம் அத்வைத கொள்கைகளை பரப்புகிறார். அப்போது அவர் படித்த நாரத்தீய சங்கை தெளிவு என்னும் ஓலைச்சுவடி அவருக்குள் பெரும் சிந்தனை மாற்றத்தை கொண்டு வருகிறது. அதேநேரம் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தீண்டாமை கொடுமைகளால் கொதித்துப்போன அயோத்திதாசர் சாதிய இழிவுகளில் இருந்து விடுதலை பெற பௌத்தம் ஒன்றே தீர்வு என புத்தரை நோக்கி நகர்கிறார்.

சிங்காரவேலர்

இதற்கிடையே 1880 களில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழராக பதிவு செய்யச் சொல்லி வேண்டுகோள் வைத்தார். ஆதித்தமிழர், ஆதி திராவிடர் போன்ற அடையாளங்களை அவர் முன் வைத்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அவற்றை ஏற்க மறுத்தது. அப்போதுதான் அவர் பூர்வ பௌத்தர் எனும் அடையாளம் நோக்கிச் செல்கிறார். இந்த சமயத்தில்தான் ரெபலட் ஜான்ரெத்தினம் ஆல்பர்ட் பிரபு உள்ளிட்டவர்களின் நட்பு கிடைக்கிறது. 1885 ல் நண்பர் ஜான்ரெத்தினத்துடன் இணைந்து திராவிட பாண்டியன் என்னும் இதழை தொடங்கினார். ஆறு ஆண்டுகள் கழித்து திராவிட மகாஜன சபையை நிறுவினார். 1891 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபையின் சார்பில் ஊட்டியில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது.

இரட்டைமலை சீனிவாசன்

இதில் பறையர் என கூறுவது குற்றம் என சட்டம் இயற்ற வேண்டும். பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும். கல்வி வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும், பிரிட்டிஸ் அரசுக்கும் அனுப்பப்பட்டது. அதையடுத்து 1892 ல் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில் நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார் அயோத்திதாசர். மேலும் இறைவனை வழிபட எங்கள் மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டபோது அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரை வெளியே துரத்துங்கள் என சத்தம் போட்டனர். உங்களுக்கு மதுரை வீரன் சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ணசாமி கொடுத்திருக்கிறோம். சிவன், விஷ்ணு சாமி உங்கள் குலத்தோருக்கு அல்ல என பதில் கூறினர். அப்படியெனில் எங்களுக்கு உங்கள் சாமிகள் வேண்டாம். எங்களுக்கு இலவச கல்வியும், நிலமற்றவர்களுக்கு நிலமும் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்குப் பின்னர் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்ற உணர்வு எழும்பி ஆங்கிலேய நண்பரான ஆல்பர்ட்டின் உதவியால் இலங்கைக்குச் செல்கிறார். அங்கு சிங்கள பௌத்த துறவியிடம் தீட்சை பெற்று தாய்நாட்டிற்கு திரும்புகிறார்.

பிறகு தென்இந்தியா முழுவதும் பௌத்தத்தை பரப்பும் நோக்குடன் சாத்ய பௌத்த சங்கத்தை தோற்றுவித்தார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பினார். இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல. அவர்கள் அனைவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தை முன்வைத்து பேசியும், எழுதியும் வந்தார். தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் பண்டிதர். கல்விப் புலமை, குடும்பச் சொத்தாக கிடைத்த சித்தமருத்துவம், பௌத்த சமயம் வழிமொழியும் சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையாக நடமாடி வந்தார் பண்டிதர்.

1907 ஆண்டு ஒரு பைசா தமிழன் எனும் பத்திரிகையை தொடங்கினார். அதற்கு அவர் பெயர் காரணமும் கொடுத்தார். ஒரு நயா பைசாவுக்குகூட தகுதியில்லாதவனாக தமிழன் இருந்து வருகிறான் எனும் வேதனையை விளக்கும்விதமாக ஒரு பைசா தமிழன் எனும் பெயர் வைக்கப்பட்டதாக கூறினார். இந்த பத்திரிகையில் தொடர்ந்து பிராமணிய சிந்தனைகளுக்கு எதிராக கட்டுரைகளை எழுதி வந்தார் அயோத்தி தாசர். அதன்மூலம் இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைப்பு செய்தார். இது பல தரப்பிலும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பௌத்தம் வசம் இருந்தன என்றாலும் காலப்போக்கில் இவையெல்லாம் எப்படி இந்து மயமானது என்பதையும் விளக்கி எழுதினார். இந்த காலகட்டத்தில் புகழ் பெற்ற பத்திரிகையாக வெளியான ‘சுதேச மித்திரன்“ பத்திரிகையுடன் கடும் வார்த்தைப் போர்களையும் நடத்தியுள்ளார். சுதேச மித்திரன் ஆசிரியர் பாரதியாருக்கும், அயோத்தி தாசருக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் தொடங்கிய போது அவருடைய மைத்துனர் இரட்டைமலை சீனிவாசன் பறையன் எனும் இதழைத் தொடங்கினார். இவர் திராவிட மகாஜன சபையை நிறுவியபோது அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார். இவ்வாறு இரண்டு பேரும் வெவ்வேறு தளங்களில் ஆதிக்க சாதியினருக்கு எதிராக அனுதினமும் போராடி வந்தனர்.

அயோத்திதாசரைப் பற்றிய குறிப்புகள் திருவிகவின் நாட்குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. அதில் அயோத்திதாசர் எங்களது குடும்ப மருத்துவர் எனும் திருவிக, இளம்பருவத்தில் நான் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டபோது அயோத்திதாசர் தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும் பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும், பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார் என்றும் அவரைப் பற்றி கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் முதல் சாதி ஒழிப்பு போராளியான அயோத்திதாச பண்டிதர் 1914 ஆம் அண்டு காலமானார். இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்திருந்தால் எண்ணற்ற மாற்றங்களை தமிழ் சமூகம் சந்தித்திருக்கக் கூடும். பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்பு போராளிகளின் மூத்த முன்னோடியாக விளங்கியவர் பண்டிதர் அயோத்திதாசர். அதனால் தான் தங்கவேலு அப்பாதுரை பண்டிதரையும், அயோத்திதாசர் பண்டிதரையும் தன்னுடைய பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், சீர்திருத்த கருத்துக்களுக்கும் முன்னோடிகள் என பெரியார் போற்றினார். அதைப்போல பலமுறை சென்னை வந்து அயோத்திதாசர் குறித்த தகவல்களை அம்பேத்கர் சேகரித்துச் சென்றார் என கூறப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு அம்பேத்கர் புத்தமதத்தை தழுவியதும் அயோத்திதாசரின் அடியொற்றிதான் என கூறுவோரும் உண்டு. திமுக ஆட்சிக்காலத்தில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் துணையுடன் பல திட்டங்களை நிறைவேற்றியது திமுக. அதில் அயோத்திதாசரைப் பற்றிய திட்டங்களுக்கு திமுக உரிய அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி 1999 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2005ஆம் ஆண்டு திறக்கப்பட்டதுதான் தாம்பரத்தில் செயல்பட்டு வரும் இன்றைய அயோத்திதாசர் ஆராய்ச்சி மையம்.

கலைஞரின் முன்முயற்சியால் 21 அக்டோபர் 2005 ஆம் ஆண்டு அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அயோத்திதாசர் நடத்திய ஒரு பைசா தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை 2008 ஆம் ஆண்டு சர்.பி.டி.தியாகராய அரஙகில் அப்போதைய முதல்வர் கலைஞர் மிகப்பெரிய அளவில் அரசுவிழாவாக கொண்டாடி சிறப்புச் சேர்த்தார். அதுமட்டுமின்றி அயோத்திதாசர் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அவரின் வாரிசுகளுக்கு பத்து லட்சரூபாய் நிதியும் வழங்கப்பட்டது. அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு சமத்துவம், பொதுவுடைமை, தமிழியம் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு அயோத்திதாசர் பண்டிதர் விருது வழங்கப்படும் என அறிவித்தது பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு.

இப்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கூறியள்ளது. சித்தமருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பத்திரிகையாளர், தமிழர் என்ற உணர்வை முதலில் ஏற்படுத்தியவர். திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அயோத்திதாசரை திராவிடக் கட்சிகள் உரிய முறையில் நினைவு கூர்ந்துள்ளது என்பதே வரலாறு. அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் திராவிட கட்சிகள் அயோத்தி தாசரை கண்டு கொள்ளவில்லை என கூறுவதெல்லாம் உண்மையை மறைக்கும் சூழ்ச்சிதான்.

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button