தமிழகம்

பெண்களுக்கு இலவசம்… : ஆண்களுக்கு பேருந்து கட்டண உயர்வா..?

அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது.

அதன்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு முன்பு குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.5 இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர்ப் பேருந்துகளில் ‘மகளிர் இலவசம்’ என்ற பலகை வைக்கப்பட்டு, அதில் பயணம் செய்யும் மகளிர் இலவசமாகவும், ஆண்களிடம் கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகர்ப்புறப் பேருந்துகளைவிட புறநகர்ப் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. அதேசமயம், இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் நகர்ப்புறப் பேருந்துகளிலும் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் என்று தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், “இது அரசாங்கத்துக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்து நடக்கிறதா? அல்லது தெரியாமல் நடக்கிறதா? என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஆண்களுக்கான பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

சாதாரண நகரப் பேருந்துகளில் இதுவரை 6 கோடியே 53 லட்சம் மகளிர் இலவச பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன், பெண்களின் இலவச பயணத்துக்காக ஆண்களுக்கான பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஓபிஎஸ் கூறுவதில் உண்மையில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தவறானது. டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லிபாபு, சௌந்திரராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button