தமிழகம்

வடமாநில தொழிலாளி கொடூர கொலை….

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது நாரணாபுரம். இங்குள்ள எடத்தளாங்காட்டு தோட்டத்தில் தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தலையில் கொடூரமாக கல்லைப் போட்டு சிதைத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலையான உடல் அருகே இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பின்னர் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் தலைமையில் உடலை ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையான வாலிபர் அருகில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி தொழிலாளி விக்ஷால் பால்(வயது18) என்பதும் அருகில் உள்ள அறையில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் விக்ஷால் பாலின் சொந்த ஊர் உத்திரபிரதேச மாநிலம் பியாரே பூர் நகரில் உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இரு தினங்களுக்கு முன் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் காட்டில் தலை நசுங்கிய நிலையில் பிணமாக விக்ஷால் பால் மீட்கப்பட்டுள்ளார்.

விக்ஷால் பாலுக்கு குடி பழக்கம் உள்ளதால் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டாரா ? அல்லது பெண் விவகாரம் தொடர்பாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால் கொலை நடந்ததா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதா ? என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கொலையான விக்ஷால் பாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொடூர கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button