![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2021/01/pongal-gift-1.jpg)
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2021/01/pongal-gift-2-1024x1004.jpg)
இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் பெற்றுள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டோக்கன்கள் ஆளும்கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த பரிசு தொகை போய் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் முறையீடு செய்தார்.
அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரப்பூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களை தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
அரசின் சுற்றிறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.