தமிழகம்

கலெக்டரிடம் மனு அளித்த மூதாட்டி.. : அதிர்ச்சியான வீட்டு உரிமையாளர்..!

மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். மக்கள் குறை தீர்க்கும் நாளன்று உடல்நிலை குன்றிய நிலையில் மெல்ல மெல்ல நடந்து வந்து மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் கையில் மனுவுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அலுவலக வளாகத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்ததும் தன் காரை நிறுத்தி மூதாட்டியிடம் என்ன ஏதுவென்று மாவட்ட ஆட்சியர் விசாரித்தார். மூதாட்டி தான் செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்ததாகவும் தன்னை வீட்டை விட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால் தற்போது கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே வசித்து வருவதாக கூறினார்.

மேலும், தான் செல்வராஜ்யபுரத்தில் வசித்து வந்த வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டின் உரிமையாளர் தர மறுப்பதாகவும் ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, மூதாட்டியை அமர வைத்து ஆசுவாசப்படுத்திய ஆட்சியர் அவருக்கு டீ வரவழைத்து குடிக்க சொன்னார். பிறகு, ‘ வீட்டுக்கு எப்படி போவீங்க ‘ என்று கேட்ட போது, ‘ஐயா, நான் நடந்தேதான் போக வேணும் ‘ என்று மூதாட்டி பரிதாபமாக சொன்னார். தொடர்ந்து, ஆட்சியர் தன்னுடைய வாகனத்திலேயே மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து சென்றார் . மூதாட்டியின் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ந்து போனார்கள்.

தொடர்ந்து. மூதாட்டியின் பிரச்னை தீர, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடத்தில் போலீஸார் தொலைபேசியில் பேசினர். மாவட்ட ஆட்சியரே மூதாட்டியின் வீட்டுக்கு வந்திருப்பதை கேள்விபட்ட வீட்டு உரிமையாளர் திகைத்து போனார். ‘கலெக்டர் வர போவாங்கனு தெரியாது, ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி கொடுத்துறேன்யா’ வாக்குறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, உங்கள் பணம் விரைவில் உங்களுக்கு கிடைத்து விடுமென்று மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, ஆட்சியரிடத்தில் தன் துயரைத்தை கூறி மூதாட்டி அழுதது சுற்றியிருந்தவர்களை கண் கலங்க வைத்து விட்டது. இதையடுத்து, மூதாட்டியின் செலவுக்காக தன் கையில் இருந்து ரூ. 5,000 வழங்கிய மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்பி போனார். மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதைத் தொடர்ந்து, பல முனைகளில் இருந்து மூதாட்டிக்கு உதவிகள் கிடைத்து வருகிறது. கொடைக்கானல்,பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் செயலாளர் சுவாமி கங்காதரனாந்தா மதுரை வந்து மூதாட்டியை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டு வாடகையை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் மூதாட்டிக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் பழங்கள் வழங்கினார். அதோடு ரூ, 10,000 நிதியுதவியும் அளித்தார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button