தமிழகம்

பழமையான கல்வெட்டுக்களை, பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? : உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், படிமங்களை மைசூரில் இருந்து தமிழகத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழக அரசு தயாரா என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த இளஞ்செழியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், மற்றும் பழமையான
கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்கள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப் பட்டு வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாச்சார சின்னங்கள் நாக்பூரில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சமஸ்கிருதம் மற்றும் திராவிட பாரம்பரிய சின்னங்கள், மைசூரிலுள்ள மையத்திலும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்து கண்டறியப்பட்ட தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக பகுதியில் இருந்து திராவிட நாகரிகத்தை வெளிப்படுத்தும் இந்த அரிய வகை பொருட்கள் ஏற்கனவே ஊட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. நமது பழங்கால தொன்மையான நாகரீகத்தை அறிந்து கொள்ள உதவும் இந்த அரிய வகைப் பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் வைக்கப்படும்போது முறையாக பராமரிக்கப்படாமல் அவை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றி, பராமரிக்க உத்தரவிட வேண்டும்“ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பழமையான கல்வெட்டுகளை, சாதாரண கற்களை போன்று எந்த வித வரலாற்று முக்கியத்துவமும் இல்லாமல் வைத்துள்ளனர். கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன என வாதிட்டார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில்,”கல்வெட்டுகள், படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. படிமங்கள் லேமினேசன் செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் பொருட்களை தமிழகத்திற்கு கொண்டுவர பாதுகாப்பான தட்ப வெப்ப நிலை இல்லை. மைசூரில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள், கல்வெட்டுகள் அனைத்தும் வாரம் ஒரு முறை பராமரிக்கப்படுகின்றன. ஆகவே அச்சம் கொள்ள தேவையில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள்,”மைசூர் தொல்லியல் பாதுகாப்பு மையத்தில் மொழி வாரியாக எத்தனை கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன? எத்தனை படிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எத்தனை கல்வெட்டுகள் எந்த எந்த மொழியில் உள்ளன? மொழிவாரியாக விவரங்கள் என்ன? எத்தனை படிமங்கள், கல்வெட்டுக்கள் சேதமடைந்துள்ளன? சேதமடைந்த கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பி இது குறித்து மத்திய அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, தமிழகத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் படிமங்களை தமிழகத்திற்கு மாற்றும் பட்சத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசு தயாரா? எனவும் கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button