தமிழக அரசை கேள்விகளால் துளைக்கும் கமல்
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/09/gettyimages-922241720-594x594-jpg_710x400xt.jpg)
கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிக்கொண்டுருக்கும் சமயத்தில் அரசியல் கட்சிகள் ஆன்லைன் மூலமும், அறிக்கை மூலமும் மட்டுமே அரசியல் பணிகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திமுக, மதிமுக, விசிக, நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் நீட் தேர்வு, கிசான் ஊழல், எட்டு வழிச்சாலை, மதுக்கடைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“நீட் நுழைவு தேர்வு விவகாரத்தில் மத்திய அரசை வழிக்கு கொண்டு வராமல் மாணவர்களுக்கு முறையான பயிற்சி தன்னம்பிக்கை தரத் தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும். நிவாரணம் வாயிலாக பிரச்னையை மூடி மறைக்க நினைக்கின்றனர்.
விவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்கு சேர்க்க தவறியதன் வாயிலாக தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா. ‘ஆன்லைன்’ கல்வி முறையில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தாமல் அலட்சியப் போக்கு காட்டியுள்ளது. மக்களை கை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களையே கை கழுவி விட்டது.
கொரோனா நெருக்கடியில் பொருளாதார பாதிப்புக்கு இடையே எட்டு வழிச்சாலைக்கு இத்தனை அவசரம் காட்டுவது ஏன்; மீனவர்கள் நலனில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்; வேலைவாய்ப்புக்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. மாநில அரசு அழுத்தம் தராமல் மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை.
அம்மா அரசு மதுக்கடைகளை எப்போது மூடும்; பருவ மழை முன்னெச்சரிக்கையாக என்ன செய்யப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்னை குறித்து விவாதிக்காமல் மூன்றே நாளில் கண்துடைப்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிப்பது ஏன்; தமிழக அரசு பதில் தருமா? ” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.