அரசியல்சினிமா

அதிமுகவை அவமானப்படுத்தி போஸ்டர்கள் : சூர்யா ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

கல்வி முறை குறித்து சூர்யா முன் வைத்த கருத்து பெரும் சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ள இந்த சூழலில், நடிகருக்கு ஆதரவாகத் தென்காசி மாவட்டத்தில் அனல் பறக்கும் வாசகங்களோடு அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த வாசகங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாகக் கூறி, இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா மாணவர்கள் தொடர் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நீட் தேர்வு முறை குறித்து தனது கருத்தையும் பதிவு செய்தார். இதற்கிடையே சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் இருக்கும் கல்வி முறை, மாணவர்களின் பாடங்கள், தேர்வுகள் குறித்து கருத்துகள் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் சமீபத்தில் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு பாஜக ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. பலர் சூர்யாவைக் கண்டித்து கருத்துகள் பதிவிட்டனர். அதே வேளை சூர்யாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், நடிகரின் ரசிகர்கள் கருத்துகள் கூறினார்.

இந்நிலையில் தென்காசியில் சூர்யா ரசிகர்கள் இந்த கருத்துத் தொடர்பாக மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டர்களில், “நீட் தேர்வைத் தடை செய். அறச்சீற்றம் என்பது அநியாயத்தைக் கண்டவுடன் வருவது. கட்சி ஆரம்பித்து, கொடி, முதல்வர் வேட்பாளர் என்பதால் வருவதல்ல. மாணவர்களுக்காக அரசாங்கம் பேசுமோ பேசாதோ, அகரம் எப்போதும் பேசும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த போஸ்டர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த போஸ்டர்களில் உள்ள வாசகங்கள் அரசைக் குறிப்பிடும் வகையில் உள்ளது எனக் குறிப்பிட்டுச் சம்பந்தப்பட்ட சூர்யா ரசிகர்கள் மீது மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button