தமிழகம்

வேலை செய்யாத ஆசிரியர்களுக்கு ரூ 2000 கோடி சம்பளமா ?

தமிழகத்தில் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு மட்டும் 70 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் செலவிடப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், அவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் அமலுக்கு வந்த ஊரடங்கால், அத்தியாவசியம் தவிர்த்து அனைத்துவிதமான தொழில்களோடு கோடிக்கணக்கான மக்களும் வருமானம் இழந்து வீட்டுக்குள் முடங்கினர்.

சிலமாதங்கள் கழித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிப்பதால் ஏராளமான தொழிலாளர்கள் பணி இழந்து தவித்து வருகின்றனர். பலர் உள்ளூரில் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தின் பசியாற்றி வருகின்றனர்.

இந்த கொரோனா சூழலில் டிசம்பர் மாதம் வரை பள்ளிக்கூடங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசின் வழிகாட்டு குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஊரடங்கு அமலான நாள் முதல் தற்போதுவரை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே முழு ஊதியம் பெற்றுவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் மொத்தம 3 1/2 லட்சம் ஆசிரியர்கள், பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படுகின்றது. அந்தவகையில் ஒரு நாளைக்கு மட்டும் 70 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் இருந்து இவர்களுக்கான சம்பளமாக அரசு வழங்குகின்றது.

ஒவ்வொரு மாதமும் எந்த ஒரு பணியும் செய்யாத இந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தமாக 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அவர்களின் அறிவாற்றலை அரசின் கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல கொரோனாவின் ஆரம்ப காலம் தொட்டு வீதிகளில் இறங்கி வீடுவீடாக, சென்று குப்பைகளை சேகரித்த தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகட்சமாக ஒரு மாத சம்பளம் 8500 மட்டுமே என்கிறார்கள்.


இன்று வரை பணி அனுமதி கிடைக்காமல் முடங்கிப் போயிருக்கும் டிராவல்ஸ் தொழில் செய்யும் ஓட்டுனர்களின் தவிப்புகளோ சொல்லிமாளாது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் வாழை இலை பயன்பாடின்றி மாதம் சொற்ப வருமானம் மட்டுமே கிடைப்பதாக வேதனை தெரிவிக்கிறார் இலைவியாபாரி ஒருவர்.
மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வருவதில்லை என்றும் ஆசிரியர்கள் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது வந்து செல்கின்றனர் என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தாங்கள் எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வசதி செய்து கொடுத்தால் ஆன்லைன் வகுப்பு எடுக்க தயார் என்றும் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு அரசு கல்லூரி பேராசிரியர்களும், பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்களும், குறிப்பிட்ட அளவு ரெயில்வே ஊழியர்களும் பணிக்கு செல்லாமலே ஊதியம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு மேலாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாதம் 2000 கோடி ரூபாயை சம்பளமாக பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து கொரோனா காலத்தில் அரசுக்கு உதவியாக மாற்று பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிக்குச் செல்லும் சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிர்த்து, வேலைக்கே செல்லாத பல அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களை, அரசின் இ.சேவை மையம் மற்றும் நல வாரிய அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிகமாக மாற்றுப்பணி வழங்கினால் அரசுப் பணிகள் தடையின்றி நடக்கும் என்பதோடு, அரசுப் பணமும் வீணாகாது என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லாத் தரப்பு மக்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுவது சரியான நடவடிக்கையா ? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

வீட்டிலேயே இருக்கும் ஆசிரியர்களுக்கு, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு மருத்துவ மனைகளில் மாற்றுப்பணிகள் வழங்கலாம் , கொரோனா ஆய்வக ரிசல்ட்டை பதிவு செய்யும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கோ, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குச் செல்வது போல வீடுவீடாக கொரோனா சோதனைக்கோ செல்ல அறிவுறுத்தினால், அந்த பணிக்கு புதிதாக ஆட்களைத் தேர்வு செய்து அரசின் நிதி சம்பளமாக வீணாவதை தவிர்க்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்

தமிழகத்தைப் பொறுத்தவரை நிர்வாகம் மற்றும் ஆன்லைன் கல்விப் பணிக்காக 25 சதவீத ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு சென்றுவருவதாக எடுத்துக் கொண்டால் கூட, மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி வேலை செய்யாத நாட்களுக்கான சம்பளத்தை முழுமையாக ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் எப்போது செல்வார்கள் ? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வில் ஒரு மாணவரைக் கூட தங்கள் கல்வித் திறனால் தேர்ச்சி அடைய வைக்க இயலாத அரசுப பள்ளி ஆசிரியர்கள், குற்றஞ்சாட்டுவோர் மீது பாய்வதை விடுத்து, இந்த ஆண்டாவது நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து அவர்களின் மருத்துவகனவை நிறைவேற்றி அளப்பறிய தியாகங்கள் மூலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் உண்மையிலேயே இமயமலை போல உயர்ந்து நிற்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதே வேளையில், 10 ஆம் வகுப்பு போல நீட் தேர்வில் ஆல்பாஸ் உத்தரவு வரவாய்ப்பில்லை என்பதையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

  • வேல்மணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button