தமிழகம்

சாத்தான்குளம் விவகாரம் : நீதிபதியைத் தண்டிக்க வாய்ப்புகள் உண்டா? : நீதிபதி கே.சந்துரு விளக்கம்

சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். எனினும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் ஐந்து பேர் மீது பணியிடைநீக்கம், பணியிட மாற்றம் என துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால், தந்தை மகன் இருவரையும் சிறையிலடைக்கும் முன்பு கோவில்பட்டி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது உடல்நிலை சரியாக இருக்கிறது என்று சான்று பெற்று சமர்ப்பித்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் பரிசோதித்த பிறகுதான் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சிறையிலடைக்க உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், சாத்தான்குளம் சம்பவத்தில் அப்படித்தான் நடந்ததா என்று கேள்விகள் எழுந்தன. அதன்பிறகு வெளியான தகவல்களின் அடிப்படையில், அவர்கள் காவல்நிலையத்திலேயே கடுமையாகத் தாக்கப்பட்டுத்தான் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது. இதனையடுத்து, சாத்தான்குளம் நீதிபதியும் கொலை வழக்கில் தொடர்புடையவர்தான் என்று கருத்துகள் எழுந்தன.

ஆனால், நீதிபதி மீதான நடவடிக்கை தொடர்பாக பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே இருந்தது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை இந்தியாவின் நீதிமன்றத் தீர்ப்புகள். அதேபோலத்தான் நீதிபதியும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், தீர்ப்பே ஊழலானது அல்லது முறையற்றது என்று நிரூபிக்க முடிந்தால், நீதிபதி மீதும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்கிறார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு.

இதுகுறித்துக் கேட்டபோது, “ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்புக்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால், தீர்ப்பு ஊழலான முறையில் வழங்கப்பட்டுள்ளதாக இருந்தால் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கலாம். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் (Subordinate Judges) மீது இதுபோல நடவடிக்கை எடுப்பதற்கான முழு அதிகாரமும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உண்டு.

நீதிபதிகள் மீதான நடவடிக்கை என்பது அரசியலமைப்பு விவகாரமாயிற்றே?

ஆம். அப்படி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 233, 234, 235 ஆகியவை வழங்குகின்றன. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதானால் மட்டுமே, நாடாளுமன்ற அவையின் ஒப்புதல் வேண்டும். ஆனால், ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தின் அதிகாரமே போதுமானது.

சாத்தான்குளம் விவகாரத்தில் டி.கே.பாசு வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட 11 வழிகாட்டு நெறிமுறைகளை மீறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும், மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகள் வந்தபிறகு மட்டுமே நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

மேலும், “சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், நடவடிக்க எடுக்க மனம்தான் வேண்டும். ” என்றும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button