தமிழகம்

மனிதநேயத்துடன் வேலை வழங்கிய கலெக்டர்

பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய 19 வயது பெண்ணுக்கு சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்திரவை அவரது வீட்டிற்கே நேராக சென்று வழங்கி அசத்தினார் கலெக்டர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா. இவர் சத்துணவு உதவியாளராக பணி புரிந்து வந்த நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது கணவர் வெங்கடேசன் கடந்த ஒராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களது மகள்கள் ஆனந்தி (19), அபி (17), மற்றும் மகன் மோகன் (16) ஆகியோர் பாட்டி ராணியின் பராமரிப்பில் இருந்து வந்தனர்.இதனை தொடர்ந்து ஆனந்தி கடந்த மாதம் 13 ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ். கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் “ தனது தாயார் பணிக் காலத்தில் இறந்து விட்டார்
அதன்பின் பாட்டியின் பராமரிப்பில் தங்கை, தம்பியுடன் வசித்து வருகிறேன்.அவர்களை காப்பாற்றுவதற்கு நான் கூலி வேலைக்கு சென்று வருகிறேன். எனவே கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் “ என தெரிவித்திருந்தார். பிளஸ்2 முடித்த ஆனந்தி கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24ந் தேதி பாட்டி ராணியும் இறந்து விட்டதால் திக்கற்ற நிலையில் தவித்த ஆனந்தி கலெக்டரை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

அப்போது அவரிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், “19 வயதுள்ளவருக்கு அரசுப் பணி வழங்க எவ்வித முகாந்திரமும் இல்லை. இருப்பினும் தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று உறுதி அளித்தார். 26-.9-.2018 அன்று கனிகிலுப்பை கிராமத்திற்கு வந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தன்னிடம் மனு அளித்த ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக சென்றார். அப்போது தங்கை, தம்பி ஆகியோரின் படிப்பு குறித்து விசாரித்து தைரியப்படுத்தினார். அத்துடன் அவரது வீட்டிலேயே மதிய உணவை சாப்பிட்ட கலெக்டர், ஆனந்தியிடம்,”உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு எடுத்துரைத்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணி செய்ய உத்திரவினை வழங்க வந்துள்ளேன் என்றார். தொடர்ந்து பணி உத்திரவினை ஆனந்தியிடம் வழங்கி அதற்கான நகல்களில் அவரே கையெழுத்து பெற்றார்.
பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது :- இளம் பெண் ஆனந்தி கடந்த மாதம் என்னை சந்தித்து மனு அளித்த பொழுது, அவரது குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைத்தார். நானும் அரசு செயலாளரிடம் தகவல் அனுப்பி 17 வயதிலேயே குடும்ப சுமைகளை ஏற்று தொடர்ந்து விடா முயற்சிகளை மேற்கொண்டதால் தற்போது அவரது சொந்த ஊரிலேயே சத்துணவு அமைப்பாளர் ஆக பணி நியமனம் செய்ய பரிந்துரைத்தேன். அதன்படி அரசு உத்திரவின் பேரில் பணி உத்திரவினை வழங்கியுள்ளேன். இப்பெண்ணை தொலை தூர கல்வி மையம் மூலம் பி.ஏ. தமிழ் படிக்கவும், இவரது சகோதரி அபி, இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தொடர்ந்து இலவசமாக படிப்பதற்கும், ஆனந்தியின் தம்பி மோகன் எஸ்வி நகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வசித்து வரும் வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் பசுமை வீடு திட்டத்தின் கீழ் அரசே முன்னின்று வீடு கட்டித் தரப்படும். இவர்களுக்கு உதவிகரமாக ஆரணி அரிமா சங்கம் சார்பில் சைக்கிள் ஒன்றும்,2 மாதங்களுக்குண்டான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி இவர்கள் யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் இருக்காது.மாதம் 9 ஆயிரம் சம்பளம் பெற்று பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும், வீட்டில் குடும்ப தலைவராகவும் இருந்து பொறுப்பாற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, தாசில்தார் கிருஷ்ணசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் வி.திலகவதி மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த இளம் பெண்ணின் கோரிக்கையை ஏற்று கிராமத்திற்கே வந்து பணி உத்தரவு வழங்கியதை கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்து பாராட்டினர். இதே மாதிரி ஒவ்வொரு அலுவலரும் தனக்கு வழங்கப்பட்ட பணியை பொறுப்புடன் செயல்பட்டு அரசுக்கு நல்ல பெயர் பெற்று தந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

-முஸ்தாக் அகமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button