அரசியல்

தேவேந்திர குல வேளாளர்: அரசாணை வெளியிடக்கோரி போராட்டம்!

குடும்பன், காலாடி உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டி 125 நாட்களாக கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளாததால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ என்ற கோஷத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

உடனடியாக தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், பாதிரியார், தேவேந்திர குலத்தான் என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என பல ஆண்டுகளாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் கருப்பு சட்டை மட்டுமே அணிந்து 125 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிடாத நிலையில், ஒரு நாள் ஒரு கிராமம் என்ற கோஷத்துடன் தினசரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சண்முகம் சுதாகர், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அரசாணை வெளியிடாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தையும் பல்வேறு கோணங்களில் நடத்துவோம். இது வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button