கள்ளக்காதலியின் வீட்டுக்குள் நுழைய பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார்…
![](https://naarkaaliseithi.com/wp-content/uploads/2020/03/dgl.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கொத்தனார் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சித்தரேவு சாலை பகுதியில் ரத்தினகுமார் என்பவரின் மாங்காய் குடோன் உள்ளது. கடந்த மாதம், இவரது குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ரத்தினகுமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், தீ விபத்து நடந்த இடத்தில் கிடந்த பாட்டில் துருப்புச் சீட்டாக அமைந்தது. அதில், பெட்ரோல் வாங்கி வந்து குடோனில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்றது.
தீ விபத்து நடந்த அன்று, அங்குள்ள பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் பாட்டிலில், ஒருவர் பெட்ரோல் வாங்குவது தெரிய வந்தது. இதனை அடுத்து, விசாரணை நடத்தி போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர், அய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பது தெரியவந்தது. 24 வயதான அவர் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில். அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அவருக்கு, கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனையடுத்து தனது கள்ளக்காதலியை இரவில் சந்திக்க ராஜாங்கம் திட்டமிட்டார். ஆனால் கள்ளக்காதலி வசிக்கிற தெருவில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது.
இதனால், அவர்களின் கவனத்தை திசை திருப்பி, கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்ல ராஜாங்கம் நூதனமுறையை கையாண்டார். அதாவது அப்பகுதியில் தீப்பிடித்து எரிவதை கண்டால் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்துக்கு சென்று விடுவார்கள். தான் தனது கள்ளக்காதலியுடன் வீட்டில் தனிமையில் இருக்கலாம் என்று கருதினார். இதற்காக, அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ராஜாங்கம் பாட்டிலுடன் சென்றார். அங்கு பாட்டிலில் பெட்ரோல் வாங்கினார். பின்னர் அதனை பெட்ரோல் குண்டாக பயன்படுத்தி, கூரையால் வேயப்பட்டிருந்த ரத்தினகுமாரின் மாங்காய் குடோனில் வீசினார். சிறிதுநேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனைக்கண்ட அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, தீயை அணைப்பதற்காக குடோன் அருகே சென்று விட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திய ராஜாங்கம், யாருடைய கண்களிலும் படாமல் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று இரவில் தங்கி விட்டு சென்றிருக்கிறார்.
இதனையடுத்து ராஜாங்கத்தை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலியை சந்திப்பதற்காக குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரகுநாத்